செவ்வாய், 7 அக்டோபர், 2025

15 மண்டலங்களில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

 

remove encroachment on footpaths

15 மண்டலங்களில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

சென்னையில் நடைபாதைகளை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் மற்றொரு முயற்சியாக, சென்னை மாநகராட்சி (GCC) அதன் 15 மண்டலங்களிலும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி என்பது சில மாதங்களுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான நடவடிக்கைதான் என்றாலும், இந்த முறை மாநகராட்சி, இப்பணியில் நிலையான தன்மையையும் பொறுப்புடைமையையும் உறுதிசெய்யும் விதமாக விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) வெளியிட்டுள்ளது.

வடசென்னை சாலை (NSC Bose Road), புரசைவாக்கம், தி. நகர் (T Nagar), ராயப்பேட்டை போன்ற வணிக மையங்கள் உட்பட நகரம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்பு நீண்டகாலப் பிரச்னையாக உள்ளது. ஆக்கிரமிப்பால் நடைபாதையைப் பயன்படுத்த முடியாமல், பாதசாரிகள் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உதவிப் பொறியாளர்களுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட விற்பனை மண்டலங்களைத் (designated vending zones) தவிர, மற்ற நடைபாதை ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து வரைபடத்தில் குறிக்க வேண்டும். அந்தப் பட்டியலை மண்டல வாரியாக ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டமிடலுக்காக, உதவிச் செயற்பொறியாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.

காய்கறி, பழங்கள் அல்லது இதர பொருட்களை விற்கும் தற்காலிக விற்பனையாளர்கள், மற்றும் மளிகைப் பொருட்கள், தளபாடங்கள் அல்லது பாத்திரங்கள் போன்ற பொருட்களை நடைபாதையில் பரப்பி வைக்கும் கடைகள் ஆகியவை தெளிவாக வகைப்படுத்தப்பட்டு, மாநகராட்சி செயலியில் (GCC app) பதிவேற்றப்பட வேண்டும் என்று ஆணையர் தெரிவித்தார். அமலாக்கக் குழுவினர் ஆக்கிரமிப்புகளின் புவி-குறியிடப்பட்ட (geo-tagged) புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்வர். கடைகளுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்பட்டு, அடுத்த நாள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக வாகனங்கள் மற்றும் பணியாளர்களை மண்டலங்களின் மக்கள் அடர்த்திக்கேற்ப பிரித்துள்ளது. குறைந்த மக்கள் அடர்த்தி மண்டலங்கள் (மண்டலம் 1 முதல் 3 வரை - திருவொற்றியூர்-மாதவரம் வரை) மண்டலத்திற்கு 1 லாரி வழங்கப்படும். அதிக மக்கள் அடர்த்தி மண்டலங்கள் (மண்டலம் 4 முதல் 15 வரை - தண்டையார்பேட்டை-சோழிங்கநல்லூர் வரை) ஒவ்வொரு ஆக்கிரமிப்பு அகற்றும் குழுவுக்கும் ஒரு டிப்பர் லாரி, ஒரு பாப் கேட் இயந்திரம் மற்றும் 4 பணியாளர்கள் வழங்கப்படும். அகற்றப்படும் பொருட்கள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் முயற்சிகள் ஒரு 'கண் துடைப்பு' வேலை என்று குடியிருப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் பேசிய ராயப்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன்,  "எக்ஸ்பிரஸ் அவென்யூ முதல் அமீர் மஹால் வரையிலான 400 மீ. நடைபாதையை ஃபோம் வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மக்கள் சாலையில் நடக்க வேண்டியுள்ளது. நடைபாதையை பயன்படுத்த முடியாததால், நான் சாலையில் சென்றபோது இருசக்கர வாகனத்தால் மோதப்பட்டேன். மாநகராட்சி மற்றும் துணை முதல்வரிடம் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தார். வட சென்னை குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் தலைவரான சண்முகம், சில நாட்களுக்குப் பிறகு எல்லாம் பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறது என்று கூறி, அமலாக்கத்தின் பலன் குறித்து சந்தேகம் தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-launches-fresh-eviction-drive-across-15-zones-gcc-issues-detailed-sop-for-accountability-10535889