வியாழன், 7 நவம்பர், 2013

தாளிச்சா செய்வது எப்படி ?



• இறைச்சி (எலும்பு மற்றும் கொழுப்பு சேர்ந்து) - அரை கிலோ
• துவரம் பருப்பு - 2 கைப்பிடியளவு
• கத்தரிக்காய் - ஒன்று (பெரியது)
• வெங்காயம் - ஒன்று (பெரியது)
• தக்காளி - ஒன்று (பெரியது)
• பச்சை மிளகாய் - 2
• உருளைக்கிழங்கு - 3
• கேரட் - 2
• மல்லித் தழை - சிறிது
• கறிவேப்பிலை - சிறிது
• தேங்காய் விழுது - 4 தேக்கரண்டி
• பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிது
• இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
• மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
• மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
• கரம் மசாலா தூள் - 3 தேக்கரண்டி
• புளி - எலுமிச்சை அளவு
• எண்ணெய் - 5 தேக்கரண்டி
• உப்பு - தேவையான அளவு


இறைச்சியை சுத்தம் செய்து கொள்ளவும். புளியை வெந்நீரில் ஊற வைக்கவும். துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் இறைச்சியைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின் இறைச்சி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.

பெரிய குக்கராக இருந்தால் அதிலேயே காய்கறிகளைப் போட்டு மல்லித் தூள், கரம் மசாலா தூள், உப்பு, மல்லித் தழை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இல்லையெனில் ஒரு பெரிய பாத்திரத்தில் இவை அனைத்தையும் போட்டு வேகவிடவும்.

காய்கறிகள் வெந்ததும் புளி கரைசல் ஊற்றி கொதிக்கவிட்டு, பின் துவரம் பருப்பு, தேங்காய் விழுது மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து சிறிது நேரம் கழித்து இறக்கிவிடவும்.

சூப்பரான சுவையுடன் நெய் சாதம், பரோட்டா, இடியாப்பத்திற்கு ஏற்ற தாளிச்சா தயார். இந்த தாளிச்சா முஸ்லீம்களின் வீடுகளில் மட்டுமின்றி விசேஷங்களிலும் பிரபலமானது.