சனி, 11 ஜனவரி, 2014

நபிகள் நாயகத்துக்கு சூனியம்...?





சூனியம் என்று பொருள் படும் ஸிஹ்ர் என்ற சொல் எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டே நாம் தெளிவான முடிவுக்கு வந்து விடலாம்.

 மூஸா நபி, ஈஸா நபி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளிட்ட நபிமார்கள் இறைவனின் அனுமதியுடன் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய போதெல்லாம் அவர்களின் எதிரிகள் 'இது சூனியம்' என்று வாதிட்டுத் தான் அவர்களை நம்ப மறுத்தனர் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

 'சூனியம் என்பது உண்மை அல்ல. அது ஓர் ஏமாற்றும் வித்தை. அந்த வித்தையைத் தான் இவர்கள் செய்து காட்டு கின்றனர்' என்று எதிரிகள் விமர்சனம் செய்ததிலிருந்து ஸிஹ்ர் என்றால் என்ன என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

 ஸிஹ்ர் என்பது உண்மையாகவே நிகழ்த்தப்படும் அதிசயம் என்றிருக்குமானால், நபிமார்களின் அற்புதத்தைக் குறித்து ஸிஹ்ர் என்று விமர்சனம் செய்திருக்க மாட்டார்கள். ஸிஹ்ர் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை தான் என்பதற்கு இந்த வசனங்களும் வலுவான சான்றுகளாகத் திகழ்கின்றன.

 மூஸா நபியின் காலத்தில்...

 மூஸா நபியவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்கான சான்றுகளை ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னனிடம் முன் வைத்தார்கள்.

 அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களை உண்மை என்று ஃபிர்அவ்ன் நம்ப மறுத்தான். இது சூனியம் (தந்திர வித்தை) என்றான். இவரை விடச் சிறந்த தந்திரக்காரர்கள் தனது நாட்டில் இருப்பதாகக் கூறி மூஸா நபியைப் போட்டிக்கு அழைத்தான்.

 மூஸா நபியவர்க்ள அந்தப் போட்டிக்கு உடன்பட்டார்கள். இது பற்றி திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் எடுத்துக் காட்டுகிறது.

 போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் மகத்தான சூனியத்தைச் செய்து காட்டியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

 'நீங்களே போடுங்கள்!' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

 திருக்குர்ஆன் 7:116

 அவர்கள் செய்தது சாதாரண சூனியம் அல்ல. மகத்தான சூனியம் என்று மேற்கண்ட வசனம் கூறுவதுடன் அந்த மகத்தான சூனியம் என்ன என்பதையும் தெளிவுபடக் கூறுகிறது.

 'மக்களின் கண்களை மயக்கினார்கள்' என்ற சொற்றொடரின் மூலம் அவர்கள் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. மாறாக மக்களின் கண்களை ஏமாற்றினார்கள். மகத்தான சூனியத்தின் மூலம் செய்ய முடிந்தது இவ்வளவு தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 மற்றொரு வசனம் இதை இன்னும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

 'இல்லை! நீங்களே போடுங்கள்!' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

 திருக்குர்ஆன் 20:66

 அவர்கள் செய்தது மகத்தான சூனியமே ஆனாலும் கயிறுகளையும், கைத் தடிகளையும் சீறும் பாம்புகளாக மாற்ற இயலவில்லை. மாறாக சீறும் பாம்பு போன்ற பொய்த் தோற்றத்தைத் தான் அவர்களால் ஏற்படுத்த முடிந்தது என்று இவ்வசனம் கூறுகிறது.

 மற்றொரு வசனத்தில் சூனியம் என்பது மோசடியும் சூழ்ச்சியும் தவிர வேறில்லை என்று கூறப்படுகிறது.

 'உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்' (என்றும் கூறினோம்.)

 திருக்குர்ஆன் 20:69

 இவர்கள் செய்து காட்டியது சூனியக்காரன் செய்யும் சூழ்ச்சி தான் என்ற சொற்றொடரிலிருந்து சூனியம் என்பது தந்திர வித்தை தவிர வேறு இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

 சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள்

 'சூனியம் என்பது கற்பனை அல்ல; மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் அவனைத் தள்ளலாம். பைத்தியமாக ஆக்கலாம்' என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தமது கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

 நபிகள் நாயகத்துக்கு சூனியம்

 புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களை தங்களின் கருத்தை நிரூபிக்கும் முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

 அந்த ஹதீஸ்கள் வருமாறு:

 நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். 'எனக்கு நிவாரணம் கிடைக் கும் வழியை இறைவன் காட்டிவிட்டான் என்பது உனக்குத் தெரியுமா' என்று கேட்டார்கள். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப் பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொரு வர் என் கால் பகுதியில் அமர்ந்து கொண்டார். 'இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன?' என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். 'இவருக்குச் சூனியம் வைக்கப் பட்டுள்ளது' என்று மற்றவர் விடையளித்தார். 'இவருக் குச் சூனியம் செய்தவர் யார்' என்று முதலாமவர் கேட்டார். 'லபீத் பின் அல் அஃஸம் என்பவன் சூனி யம் வைத்துள்ளான்' என்று இரண்டாமவர் கூறினார். 'எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று முதலாம வர் கேட்டார். அதற்கு இரண்டாமவர் 'சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று விடையளித்தார்.

 'எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று முதலாமவர் கேட்டார். 'தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது' என்று இரண்டாமவர் கூறினார் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். அங்கு உள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான் களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னி டம் கூறினார்கள். 'அதை அப்புறப்படுத்தி விட்டீர் களா?' என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன்' என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.

 அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 நூல்: புகாரி 3268

 தமது மனைவியருடன் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. (புகாரி 5765)

 இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) ஆறு மாதங்கள் நீடித்ததாக முஸ்னத் அஹ்மத் 23211 வது ஹதீஸ் கூறுகிறது.

 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தன்னிலை மறந்து விடும் அளவுக்கு சூனியத்தால் ஆறு மாத காலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது' என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

 மேற்கண்ட ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கருத்து போல தோன்றலாம். ஆனால் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ, அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்துக்குத் தான் வந்தாக வேண்டும்.

 பாதுகாக்கப்பட்ட இறை வேதம்

 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது; அந்த பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது; தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது' என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.

 திருமறைக் குர்ஆனின் நம்பகத் தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது விபரீதமாகும்.

 தமக்குச் சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ - இறை வேதம் - சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.

 தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும்.

 அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்ட காலம், எந்த ஆறு மாதம் என்ற விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் 'இது அந்த ஆறு மாதத்தில் அருளப்பட்ட தாக இருக்குமோ?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடும்.

 இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் உள்ள ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.

 திருக்குர்ஆனில் பொய்யோ, கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தையாகும் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது. குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான். 'இது இறைவேதமாக இருக்காது' என்ற சந்தேகம் எள் முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக இறைவன் பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான்.

 இதை விரிவாக நாம் அறிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிச்சயம் நம்ப மாட்டோம்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக் குர்ஆன் பண்டிதர்களும் பிரமிப்புடன் பார்க்கும் அளவுக்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மக்கள் திருக்குர்ஆனை இறைவனின் வேதம் என்று நம்பியிருக்க மாட்டார்கள். 'முஹம்மது தனது புலமையைப் பயன்படுத்தி உயர்ந்த நடையில் இதைத் தயாரித்து இறை வேதம் என்று ஏமாற்றுகிறார்' என்று அந்த மக்கள் நினைத்திருப்பார்கள்.

 அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே முஹம்மது நபிக்கு எழுத்தறிவை வழங்கவில்லை என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்.

 (முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

 திருக்குர்ஆன் 29:48

 எழுத்தறிவு என்பது பெரும் பாக்கியமாக இருந்தும், (68:1, 96:4) அந்த பாக்கியத்தை வேண்டுமென்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கவில்லை என்று இறைவன் கூறுகிறான்.

 திருக்குர்ஆன் இறை வேதம் என்பதில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதே இதற்குக் காரணம் என்று மேற்கண்ட வசனத்தில் அறிவிக்கிறான்.

 ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக குர்ஆனை வழங்கினால் அனைத்துச் சட்டங்களும் மக்களுக்கு ஒரே நேரத்தில் கிடைத்து விடும். ஆனாலும் இதை வேண்டுமென்றே தான் தவிர்த்ததாக இறைவன் அறிவிக்கிறான்.

 மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம்.

 திருக்குர்ஆன் 17:106

 இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

 திருக்குர்ஆன் 25:32

 சிறிது சிறிதாக அருளினால் மனனம் செய்ய இயலும். உள்ளத்தில் பதிய வைக்க இயலும் என்பதற்காகவே இவ்வாறு சிறிது சிறிதாக அருளியதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

 இந்த அறிவுரையை நாமே அருளினோம். நாமே அதைப் பாதுகாக்கவும் செய்வோம் எனவும் இறைவன் பிரகடனம் செய்கிறான்.

 (பார்க்க திருக்குர்ஆன் 15:9)

 இந்தக் குர்ஆனில் கோனலோ, குறைகளோ, முரண்பாடுகளோ இல்லை என்றெல்லாம் கூறி திருக்குர்ஆனின் நம்பகத் தன்மையை நிலை நாட்டுகிறான். (பார்க்க திருக்குர்ஆன் 18:1, 39:28, 41:42, 4:82)

 திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனின் கற்பனையா என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப் படுத்த வேண்டும்.

 அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறுவது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதை நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறும் மேற்கண்ட வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்று கூறப்படுவதை நம்ப முடியாது.

 'வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ளபடி கூறினார்கள். மற்ற விஷயங்களில் தான் மனநிலை பதிப்பு ஏற்பட்டது' என்று சிலர் இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.

 இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும். குர்ஆன் இறைவேதம் தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள்.

 நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறைவாக்கா அல்லவா என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர்.

 ஆறு மாத காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டனர்.

 செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதிவிலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள்.

 எனவே நபி(ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந் தால் அன்றைய மக்களால் திருக்குர்ஆன் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

 எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலை நாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

 நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள்.

 'முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது?' என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவறவிட்டிருக்க மாட்டார்கள்.

 இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.

 மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.

 ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் தம்மைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களின் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை.

 எனவே அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.