வியாழன், 17 அக்டோபர், 2024

சென்னை ரிலாக்ஸ்: கரையை கடந்தது, காற்றழுத்த தாழ்வு மண்டலம்

 depree

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.17) அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது. 

தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதோடு வடகிழக்கு பருவமழையும் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் மழை தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கட்கிழமை மழை தொடங்கியது. அன்று முதல் கனமழை பெய்யும் எனக் அறிவிக்கப்பட்டது. அக்.15,16-ம் தேதி சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது. தமிழக அரசு மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. 

நேற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்தது. இதனால் மழை குறைந்தது. 

இந்நிலையில்  மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு  இன்று அதிகாலை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 

மேலும்,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து வானிலை மையம் சென்னை மற்றம் புறநகர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/depression-crosses-over-puducherry-andra-coast-says-imd-7320745