சனி, 19 அக்டோபர், 2024

வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது': ஆளுநர் மீது உதயநிதி அட்டாக்

 

udhay ravi

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டம் நேற்று (அக்.18) நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் இடம்பெற்றுள்ள ’திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடப்பட்டு பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
 
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இவ்விவகாரத்தில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள். 

ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ‘திராவிடநல் திருநாடு’ எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள்.

யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம்!

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. 

ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஸ்டாலினின் பதிவுக்கு பதிலளித்த ஆளுநர், முதலமைச்சர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது என்று கூறியிருந்தார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-thai-vazhthu-row-udhayanidhi-stalin-condemns-to-gov-ravi-7338274