புதன், 2 அக்டோபர், 2024

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களே உஷார்! தூதரகம் எச்சரிக்கை!

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களே உஷார்! தூதரகம் எச்சரிக்கை! 2 10 2024

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் பதில் தாக்குதலில் நேற்று (02.10.2024) இரவு ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும், உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பாதுகாப்பு பதுங்கு குழிகளுக்கு அருகிலேயே இருக்கவும். நிலைமையை இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24/7 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். மேலும் +972-547520711 +972-543278392 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்புகொள்ளலாம். அதோடு consi.telaviv@mea.gov.in என்கிற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் நிலையை தெரிவிக்கலாம். அதுமட்டுமல்லாது, தூதரகத்தில் இன்னும் பதிவு செய்யாத இந்தியர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/indians-in-israel-beware-embassy-alert.html