சென்னை ஈ.சி.ஆரில் இளைஞர்கள் பெண்களை துரத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு தாம்பரத்தில் ஒரு காரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், மற்றொரு காரை பொத்தேரியில் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை (ஈ.சி.ஆர்.) சாலையில் பெண்கள் சென்ற காரை தி.மு.க. கொடி பொருத்திய சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவில், இரண்டுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒரு காரில் ஈ.சி.ஆர் சாலையில் நள்ளிரவு சென்றுள்ளனர். அப்போது, அந்த காரை தி.மு.க கட்சிக்கொடி பொருத்திய காரில் வந்த ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறிக்கின்றனர்.
இளைஞர்களை கண்டு அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் இளைஞர்கள் மீது கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இளைஞர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். வீடியோ அடிப்படையில் கார் எண்கள் கண்டறியப்பட்டு இளைஞர்களை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை கல்லூரி மாணவர்கள் உட்பட 5 கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு தாம்பரத்தில் ஒரு காரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், மற்றொரு காரை பொத்தேரியில் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பெண்களை துரத்திய சம்பவத்தின்போது உடன் இருந்தவர்கள் யார் யார் என்பது குறித்து அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
2 கார்களில் இருந்த 7 பேர் பெண்களை மிரட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேற்றிரவு ஒரு மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மேலும் 4 பேர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/entertainment/tamilnadu-chennai-ecr-women-car-chasing-issue-one-person-arrest-8676234