திங்கள், 1 செப்டம்பர், 2025

பீகார் போல வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது -

 

KN Nehr

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், கருணாநிதி, தொகுதி பொறுப்பாளர்கள் சந்திரசேகர், உத்ராபதி, செல்வம், பொருளாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், பகுதி செயலாளர்கள் இளங்கோ, கமல் முஸ்தபா, நாகராஜ் கனகராஜ், கவுன்சிலர்கள் நாகராஜன், கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா மற்றும்  செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வருகிற செப்டம்பர் 17-ந் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக கலந்து கொள்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் அமைச்சர் கே என் நேரு.

அதன் பின்னர் நிர்வாகிகளிடம் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், சமூக வலைதளங்களில் அதிமுக- பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பொருந்தாத கூட்டணி என இதுவரை சொல்லி வந்திருக்கிறார்கள்.
புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களும் தனியாக நிற்பதாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் தனியாக நிற்கிறார்களா? அல்லது கூட்டணி சேர்ந்து நிற்கிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் பார்வையாளர்களும் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக மீண்டும் தளபதி ஸ்டாலின் தான் வருவார் என சொல்லி இருக்கிறார்கள். ஒரு ஒன்றிய செயலாளர் முப்பதாயிரம் வாக்காளர்களை திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒருங்கிணைக்க வேண்டும். ஒரு பகுதியில் உள்ள இந்து மைனாரிட்டி ஓட்டுக்களில், 200 ஓட்டுக்களை திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒருங்கிணைக்க, அதே சமுகத்தை சேர்ந்த மூன்று நபர்களை ஒரு குழுவாக நியமிக்க வேண்டும் என தலைமை சொல்லி இருக்கிறது.

எத்தனை குழுக்கள் அமைத்தாலும், வாக்குகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய செயலாளருக்கு உறியது. கடந்த 30 ஆண்டுகால எனது அரசியல் வாழ்வில் இதுவரை நான் எந்த ஒன்றிய செயலாளரையும் பதவியில் இருந்து நீக்கியது கிடையாது. ஒரு ஒன்றிய செயலாளருக்காக காவல்துறையில் சண்டை போட்டு மீண்டும் அவரை ஒன்றிய செயலாளராக்கி இருக்கிறேன். இதனை கவனத்தில் கொண்டு ஒன்றிய செயலாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இல்லை என்றால் நீங்களே சொல்லிவிடுங்கள் வேறு ஆட்களை நியமித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் டெல்டா பகுதி, தளபதிக்கு நல்ல வாய்ப்புள்ள பகுதியாக இருக்கிறது. அறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு முறை கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்துள்ளார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு, இரண்டாவது முறை தளபதி அவர்களையும் முதல்வராக்க வேண்டும். அதற்கு நாம் எந்தவித சர்ச்சைகளுக்கும் சங்கடங்களுக்கும் இடம் கொடுக்காமல் ஒருமித்த கருத்தோடு உழைக்க வேண்டும்.

லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில், எந்தெந்த இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை சொல்ல போகிறோம். வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றமடைந்து அதனால் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியை செய்ய வேண்டும். பீகார் போல வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது என பேசினார்.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/kn-nehru-speec-in-trichy-9772468

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.14,619 கோடி பட்ஜெட்டை கோரும் உள்துறை அமைச்சகம்

 1 9 2025 

sensex

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) இந்த முறை 2027 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. இது இந்தியாவின் முதல் "டிஜிட்டல் சென்சஸ்" ஆக இருக்கும் என்றும், இதில் சாதி தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்படும் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI), சென்சஸ் 2027-ஐ நடத்துவதற்கு ரூ.14,618.95 கோடி பட்ஜெட் கோரியுள்ளது. இந்த பட்ஜெட், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதிக்குழு (EFC) ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், இது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.

சென்சஸ் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும்:

முதல் கட்டம் (வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு): ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரை நடத்தப்படும். இதில் வீடுகள், வீட்டு வசதிகள், மற்றும் சொத்துக்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.

இரண்டாம் கட்டம் (மக்கள் தொகை கணக்கெடுப்பு): பிப்ரவரி 2027 முதல் நாடு முழுவதும் தொடங்கும். இருப்பினும், லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் போன்ற சில மாநிலங்களில் இது செப்டம்பர் 2026 இல் நடத்தப்படும்.

இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் நடத்தப்படும். பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் தகவல்களைப் பதிவு செய்ய 'சுய கணக்கெடுப்பு' (self-enumeration) வசதியும் அளிக்கப்படும். அமைச்சரவை அரசியல் விவகாரக் குழுவின் (CCPA) முடிவின்படி, இந்த சென்சஸில் சாதி விவரங்களும் மின்னணு முறையில் சேகரிக்கப்படும். RGI, "சென்சஸ் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு" (CMMS) என்ற இணையதளத்தை உருவாக்கி வருகிறது. இது கணக்கெடுப்புப் பணிகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும்.

இந்த கணக்கெடுப்பிற்காக 35 லட்சத்திற்கும் அதிகமான கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது 2011 சென்சஸில் இருந்த பணியாளர்களைக் (27 லட்சம்) காட்டிலும் 30% அதிகம். வழக்கமாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சென்சஸ், இந்த முறை ஆறு ஆண்டுகள் தாமதமாகிறது. 2021-ல் நடைபெறவிருந்த கணக்கெடுப்பு, கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

1872 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 2027 இல் நடக்கவுள்ள இந்த கணக்கெடுப்பு, ஒட்டுமொத்தமாக 16வது கணக்கெடுப்பாகவும், சுதந்திரத்திற்குப் பின் 8வது கணக்கெடுப்பாகவும் அமையும். 2011 சென்சஸ் படி, இந்தியாவின் மக்கள் தொகை 1.21 பில்லியன் ஆக இருந்தது. இது 2027-ல் 1.41 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் மக்கள்தொகை, மதம், பட்டியல் சாதியினர்/பழங்குடியினர், மொழி, கல்வி, பொருளாதாரம், இடம்பெயர்வு மற்றும் கருவுறுதல் போன்ற பல முக்கிய தகவல்கள் சேகரிக்கப்படும்.  



source https://tamil.indianexpress.com/india/censur-2027-home-ministry-seeks-rs-14619-crore-budget-9773181