/indian-express-tamil/media/media_files/2025/06/05/DDBWJ5SifxhxaocluBQW.jpg)
இஸ்லாமிய மக்களின் உரிமைகளை வென்றெடுத்துப் பாதுகாக்கும் இயக்கமாகத் தி.மு.க எப்போதும் இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பல கட்சிகள், தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நபிகள் நாயகத்தின் 1,500வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
சமத்துவத்தை வலியுறுத்திய சிந்தனையாளர் நபிகளார். அதனால்தான், பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் நபிகள் சொன்ன சமத்துவத்தை, அன்பைப் புகழ்ந்தார்கள். இஸ்லாமியர்களுக்கு ஒரு இடர் வந்தால் முதலில் வந்து நிற்பது தி.மு.க. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடினோம். அந்தச் சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டார்களா எனக் கேள்வி எழுப்பியதும், அந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதுட யார் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தபோது அ.தி.மு.க இரட்டை வேடம் போட்டதும் உங்களுக்குத் தெரியும்.. அதனால்தான் அன்வர் ராஜா போன்றவர்கள் துரோகத்தின் கூடாரமாக இருக்கும் கட்சியைப் புறக்கணித்து தி.மு.க-வில் இணைந்துள்ளார்கள்.
இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருகிற, பாதுகாக்கிற இயக்கமாக தி.மு.க உங்களுடன் ஒருவராக எப்போதும் இருக்கும். ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் நேரத்திலும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம். பா.ஜ.க செய்யும் மலிவான அரசியலுக்கு துணை போகும் நபர்களை புறக்கணிக்க வேண்டும். இஸ்லாமிய மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் இயக்கமாக தி.மு.க எப்போதும் இருக்கும்.
மதத்தை மார்க்கமாக பார்ப்போர் நீங்கள், அதை அன்பு மார்க்கமாக இருக்க வேண்டுமென நபிகளார் போதித்தார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பல கட்சிகள், தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் சந்திக்கும் கொடுமைகள் முடிவுக்கு வர வேண்டும் .” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-says-ignore-those-who-support-bjp-politics-and-he-calls-for-unity-in-the-islamic-community-10486121