புதன், 3 டிசம்பர், 2014

பார்த்தாலே நேர்வழி ?.


 
فوز واقبال لمن هداه *ومن راى من اقتدى هداه

அவர் யாருக்கு நேர்வழி காட்டினாரோ அவருக்கும் அவரது நேர்வழியைப் பார்த்தவருக்கும் வெற்றியும்இ முன்னேற்றமும் உண்டு.

وروي ان الشيخ رضي الله عنه قال طوبى لمن راني فى حياتي او راى من راني او راى من راى من راني بعد وفاتي وان آخذبيد من عثر عن الاستقامة من مريدي ومحبي ليوم القيامة

என் வாழ்நாளில் யார் என்னைப் பார்த்தாரோ அவருக்கும், என் மரணத்திற்குப் பின் என்னைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்களுக்கும், என்னை யார் பார்த்தார்களோ அவர்களைப் பார்த்தவர்களைப் பார்த்தவருக்கும் நல் வாழ்க்கை உண்டு. எனது முரீதுகளிலும், எனது நேசர்களிலும் யாரேனும் நேர்வழியிலிருந்து விலகினால் அவரது கையை நான் பிடித்துக் கொள்வேன். இது கியாமத் நாள் வரையிலும் நடக்கக் கூடியதாகும் என்று அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எவ்வளவு அபத்தங்கள் உள்ளன என்று ஆராய்வோம்.

அப்துல் காதிர் ஜீலானி இவ்வாறு கூறி இருந்தால் இது அவரது நூல்களிலோ, அவரது உரைத் தொகுப்புக்களிலோ நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் இதைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இப்படி எந்த வரலாற்றுக் குறிப்பும் இந்தக் கூற்றுக்குக் கிடையாது.

அப்துல் காதிர் ஜீலானியைப் பார்த்தவர்களுக்கு நல்வாழ்க்கை உண்டு என்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணாகும். அப்துல் காதிர் ஒரு மனிதர். மனிதனை மனிதன் பார்ப்பதால் நல் வாழ்க்கை கிடைத்து விடாது. கடுகளவுக்கு அறிவுடையவனுக்குக் கூட தெரிந்த இந்த உண்மை மவ்லிதை இயற்றியவருக்குத் தெரியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எத்தனையோ காபிர்கள் பார்த்தனர். அபூஜஹ்ல் போன்ற கொடியவர்களும் பார்த்தனர். இவ்வாறு பார்த்தது அவர்களுக்கு இம்மையிலோ, மறுமையிலோ எந்த நல்வாழ்க்கையையும் அளிக்கவில்லை. நபிகள் நாயகத்தைப் பார்த்ததால் நல்வாழ்வை அடைய முடியவில்லை. ஆனால் அப்துல் காதிர் ஜீலானியைப் பார்த்துவிட்டால் நல்வாழ்வு நிச்சயம் என்ற நச்சுக் கருத்தை எந்த முஸ்லிமாவது ஏற்க முடியுமா?

ஒருவரைப் பார்ப்பதால் பாக்கியம் ஏற்படும் என்பது ஒரு புறமிருக்கட்டும். நல்லடியார் ஒருவருக்குச் சந்ததிகளாக இருப்பது கூட எந்தப் பயனுமளிக்காது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நூஹ் நபி, லூத் நபி ஆகியோரின் மனைவியர் அந்த நபிமார்களைப் பார்த்தது மட்டுமன்றி அவர்களுடன் இரண்டறக் கலந்தவர்கள். அவர்களும் கூட நரகை அடைவார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

நூஹ் நபியின் மகன் நூஹ் நபியை ஏற்கவில்லை. நூஹ் நபியின் இரத்தம் அவன் உடலில் ஓடியும் கூட அவனும் அழிந்து போனதாகக் குர்ஆன் கூறுகிறது.

இப்ராஹீம் நபி அவர்களின் தந்தையின் நிலையும் இது தான். அவரும் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பெரிய தந்தையாக இருந்தும் அபூலஹப் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளாளான்.

மிகப் பெரிய நபிமார்களை நேரடியாகப் பார்த்தது மட்டுமின்றி அவர்களுடன் இரத்த சம்பந்தமான உறவும் உள்ளவர்களின் நிலை இது. ஆனால் அப்துல் காதிரைப் பார்த்து விட்டாலே மோட்சம் கிடைத்து விடுமாம். அது மட்டுமின்றி அவரைப் பார்த்தவர்களை யார் பார்க்கின்றார்களோ அவர்களுக்கும் மோட்சம் கிடைத்து விடுமாம். அவரைப் பார்த்தவர்களை பார்த்தவர்களுக்கும் மோட்சம் உண்டாம். நபிமார்களை விட அப்துல் காதிருக்கு இருக்கும் மகிமை சிறந்தது என்று இந்தக் கதை கூறுகிறதே உண்மையான முஸ்லிம்கள் இதை நம்பலாமா?

இதைவிடப் பயங்கரமான மற்றொரு அபத்தத்தைக் கேளுங்கள்.

அப்துல் காதிர் தம் முரீதுகளின் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாராம். அவர்கள் தவறான வழியில் சென்றால் உடனே கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி விடுவாராம். அவர் வாழ்நாளில் மட்டுமின்றி கியாமத் நாள் வரை இதே வேலையாக இருப்பாராம்.

மவ்லிதை இயற்றியவர்கள் சுய சிந்தனையுடன் தான் இவ்வாறு எழுதியுள்ளார்களாஇந்த விபரீதத்தை விளங்காமல் தான் மவ்லவிமார்கள் இதை ஆதரிக்கிறார்களா?

உயிருடன் வாழும் போது கூட ஒருவர் தமது நேசர்களின் கையைப் பிடித்து அவர்களை நேர்வழியில் கொண்டு செல்ல முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போது அவர்கள் வாழ்ந்த ஊரிலேயே சில நபித் தோழர்கள் விபச்சாரம் செய்தனர், திருடினர், கனீமத் பொருட்களை மோசடி செய்தனர். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களது கைளைப் பிடித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் நபித்தோழர்களுக்கிடையே மோதல்களும், பிரச்சனைகளும் உருவாயின. இன்றளவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் பலர் பாவங்களில் மூழ்கியுள்ளனர். இவர்களின் கைகளைப் பிடித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.

ஆனால் அப்துல் காதிர் ஜீலானி என்ற மனிதர் மரணித்த பின் கியாமத் நாள் வரை முரீதுகளின் கைகளைப் பிடித்துக் கரை சேர்ப்பாராம். இதை நம்ப முடிகின்றதாநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டம் தட்டி அல்லாஹ்வுக்கு நிகராக அப்துல் காதிரை உயர்த்த வேண்டும் என்ற சதியின் ஒரு பகுதியே இந்த மவ்லிது என்பது இப்போதாவது புரிகின்றதா?

அப்துல் காதிரின் முரீதுகள் எனப்படுவோர் பலர் இன்று சினிமாத் தயாரிப்பில் ஈடுபடுவதையும் சினிமா விநியோகிஸ்தர்களாக உள்ளதையும் ஹராமான பல வழிகளில் பொருளீட்டுவதையும் காண்கிறோம். தொழுகையைக் கூட நிறைவேற்றாமல் அவர்களில் பலர் இருப்பதைக் காண்கிறோம். இவர்களின் கையைப் பிடித்து அப்துல்காதிர் தடுக்கவில்லை. தடுக்க முடியாது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வுக்குச் சமமாக்கும் கதைகளின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது என்பதற்கு மற்றொரு சான்றைப் பார்ப்போம்.