செவ்வாய், 9 டிசம்பர், 2014

திருமணம் செய்து கொள்ளலாம்

6/12/2014
முஸ்லிம் தனிநபர் சட்டங்களின்படி 15 வயது நிறைவடைந்த முஸ்லிம் பெண் திருமணத்திற்கு தகுதி வாய்ந்தவர்: குஜராத் நீதிபதி ஜே.பி.பர்டிவாலா உத்தரவு.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த யூசுப் லோகத் என்ற முஸ்லிம் வாலிபர் அதே மதத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தை எதிர்த்த சிறுமியின் தந்தை, தனது மைனர் மகளை யூசுப் லோகத் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து விட்டதாக அளித்த புகாரின் பேரில் அவர் மீது குழந்தைத் திருமண தடைச்சட்டம்-2006-ன்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கை ரத்து செய்து தங்களை கணவன்-மனைவியாக வாழ அனுமதிக்க வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டில் யூசுப் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணையின்போது ஆஜரான மணமகள், தன்னை யாரும் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்யவில்லை என்றும், கணவர் வீட்டாரின் அரவணைப்புடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திக்கொண்டிருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
மேலும், ஆரம்பத்தில் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த எனது பெற்றோரும் தற்போது மனம்மாறி இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
'முஸ்லிம் தனிநபர் சட்டங்களின்படி ஒரு பெண் பருவம் எய்தினாலோ அல்லது 15 வயதை கடந்து விட்டாலோ, தனது பெற்றோரின் சம்மதம் இல்லாமலேயே தனக்கு விருப்பமானவரை அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை பொருத்தவரை குற்றம்சாட்டப்பட்ட வாலிபரும் பெண்ணும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள். இருவரும் மனம் விரும்பி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமானபோது அந்த பெண்ணுக்கு 17 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோர்ட்டில் ஆஜரான பெண்ணின் பெற்றோரும் இந்த திருமணத்தை தற்போது ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது குற்றப்பிரிவு சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க எந்த அடிப்படை முகாந்திரமும் இருப்பதாக நான் கருதவில்லை. எனவே, அவர் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்’ என நீதிபதி ஜே.பி.பர்டிவாலா உத்தரவிட்டுள்ளார்.