சனி, 9 ஜூலை, 2016

வன்மையாக கண்டிக்கிறோம்!


பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் சகோ ஜாகிர் நாயிக் அவர்களுக்கெதிராக இந்திய அரசு மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில அரசுகள் விசாரணைக்கு உத்தரவிட்டுருப்பது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை கவலையடையச் செய்துள்ளது.
பங்களாதேஷ் தற்கொலை தாக்குதலில் பங்கேற்ற ஒருவன் மருத்துவர் ஜாகிர் நாயக்கின் வீடீயோக்களை பகிர்ந்திருக்கிறான் என்ற அடிப்படையில் இந்த விசாரணை உத்தரவிடப்பட்டிருக்கின்றது என்பதை அறியும் போது நாம் வாழ்வது சமூகவலை தளங்களின் காலத்தில் தானா என்று கேட்க தோன்றுகிறது.
மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை அடிப்படை ஆதாரங்களின் அடிப்படையில் அனைவரும் விளங்கும் வண்ணமாக எடுத்துரைப்பதில் தேர்ச்சி பெற்றவர். கடந்த 25 ஆண்டு காலமாக இவருடைய பிரச்சாரங்களை தொடர்ந்து வருபவன் என்ற நிலையில் இன்று வரை தீவிரவாதத்தை ஆதரித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசியதாக நிருபிக்க இந்திய அரசால் இயலாது என்று உறுதியாக கூற இயலும்.
ஆனால் அரசு விசாரணைக்கு முன்னர் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் மருத்துவர் ஜாகிர் நாயக்கை ஊடக விசாரணை செய்து அவரை குற்றவாளியாக அறிவிக்கும் செயல் வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று. ஊடகங்களின் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான இந்த நிலைபாட்டை ஜம்இயத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் வன்மையாக கண்டிக்கிறது.
ஒரு மார்க்கத்தைப் பின்பற்றவும் அதை பிரச்சாரம் செய்யவும் இந்திய அரசியல் சட்டம் உரிமை வழங்கியிருக்க RSS வகையறாக்கள் தொடர்ந்து இந்த உரிமையை மறுத்து வருவதை நாம் பார்க்கிறோம். அவருடைய நிகழ்ச்சிகளுக்கெதிராக தொடர்ந்து காவல்துறையை தூண்டி அனுமதி மறுப்பு போன்ற செயல்களை செய்வதன் மூலம் அவருடைய பிரச்சாரத்திற்கு தடை ஏற்படுத்த தொடரான சதிவேலைகள் செய்யப்பட்டன.அந்த சதிவேலைகளின் இறுதி நடவடிக்கையாகத்தான் இந்திய முஸ்லிம்கள் இந்த விசாரணையைப் பார்க்கின்றனர்.
ஜம்இயத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் மருத்துவர் ஜாகிர் நாயக்கிற்கு எதிரான ஆதாரமில்லாத விசாரணை அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறது.
இந்த தருணத்தில் தமிழகத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்று பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
உயர்ந்த நீதிமன்றமான படைத்த இறைவனின் நீதிமன்றத்தில் உயரிய நற்பலன்கள் கிடைக்கும் நற்பணியை செய்து வரும் மருத்துவர் ஜாகிர் நாயக்கிற்கு வேண்டி அனைவரும் அல்லாஹ்விடம் முறையிடுவோம்.
குளச்சல் P. நூர்முகம்மது
Noor Mohamed colachel
மாநில பொருளாளர்
ஜம்இயத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்