பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதியுள்ளார்.
இந்நிலையில், யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் யு.ஜி.சி., திருத்த விதிகளை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதீப் பந்தோ பாத்யாயா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் மனோஜ் குமார்ஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், புரட்சிகர சோஷிய லிஸ்ட்டின் பிரேம சந்திரன், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சுப்பராயன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
source https://news7tamil.live/ugcs-new-rule-dmk-student-group-to-protest-today.html