16 2 25
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி, மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக நேற்று (பிப்.15) இரவு டெல்லி ரயில்வே நிலையத்தில் அதிகளவில் பயணிகள் திரண்டிருந்தனர். இந்த சூழலில், அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் வேறொரு தண்டவாளத்தில் வந்தால் பயணிகள் முந்திக்கொண்டு ரயிலில் ஏற முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
அந்த வகையில் தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் வெளியான செய்தி மிகவும் வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.
இந்த சம்பவம் ரயில்வே துறையின் தோல்வியையும், அரசின் அலட்சியத்தையும் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. பிரயாக்ராஜுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் செல்வதைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையத்தில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியத்தால் யாரும் உயிரிழக்காமல் இருப்பதை அரசாங்கமும் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்”
இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/delhi-stampede-incident-once-again-shows-government-negligence-rahul-gandhi-alleges.html