நாடு முழுவதும் டிஜிட்டல் கைது எனும் பெயரில் நடந்த மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 17 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகளை மத்திய உள்விவகாரத்துறை அமைச்சகம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்திருக்கும் தகவலின்படி,
“இந்த வாட்ஸ்ஆப் கணக்குகள் பெரும்பாலும் கம்போடியா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து நாடுகளிலிருந்து மோசடி போன்ற குற்றச்செயல்களுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம், மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பாக வந்த புகார்களை விசாரித்து, வாட்ஸ்ஆப் கணக்குளை ஆராய்ந்து, வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு இந்த எண்களை அனுப்பி முடக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த மோசடிகள் பெரும்பாலும், கம்போடியாவில் இருக்கும் சீன காசினோக்களில் இயங்கும் கால் செண்டர்கள் மூலம் நடப்பதாகவும், வேலை வாங்கித் தருவதாக கம்போடியா அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் அங்கு, இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுத்தப்படுவதும், கண்டுபிடிக்கபட்டுள்ளது.
டிஜிட்டல் கைது மோசடி என்பது, மோசடியாளர்கள் காவல்துறை அல்லது நீதித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் போல, சாதாரண மக்களிடம் பேசி, அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி, பெரிய அளவில் பணத்தை பரிமாற்றம் செய்தால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கலாம் என ஏமாற்றுவதாகும்.
இதில் மோசடியில் ஈடுபடுவோர் தங்களை காவல்துறை உயர் அதிகாரி, சிபிஐ அதிகாரி, வருமான வரித்துறை அதிகாரி, சுங்கத்துறை அதிகாரி போல காட்டிக்கொள்வார்கள். தவறுதலாக தங்களது பெயர் மோசடியில் சிக்கிக் கொண்டதைப் போல உணரும் மக்கள், எப்படியாவது இதிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.
அண்மையில், பிரதமர் மோடி, இது பற்றி நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறி, இதுபோன்ற அழைப்புகள் வந்தால், சைபர் பிரிவுக்கு புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். ஒவ்வொரு நாளும் இந்த மோசடியின் மூலம் சராசரியாக ரூ.6 கோடி மோசடி செய்யப்படுவதாகவும், நடப்பாண்டில் மட்டும் முதல் 10 மாதங்களில் 2,140 கோடி ரூபாய், இதுபோன்ற மோசடிகள் மூலம் சாதாரண மக்களின் பணம் திருடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது”.
source https://news7tamil.live/digital-arrest-of-an-officer-too-central-government-blocks-17000-whatsapp-accounts.html