சனி, 11 ஜூலை, 2026

முக்தார், திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம் ஏன்? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

 

Trichy Surya and Mukhtar detained under Goondas Act Tamil News

பா.ஜ.க நிர்வாகிக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கைது செய்யப்பட்ட யூடியூபர் முக்தார் அகமது மற்றும் அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனுக்கள் குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை நேற்று (ஜூலை 10) விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்து சென்னை காவல்துறை தங்கள் பதில் மனுக்களைத் (counters) தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

திருச்சி சூர்யா மற்றும் முக்தார் ஆகியோர் தனக்கு எதிராக அவதூறான, பாலியல் ரீதியான மற்றும் அவமதிக்கும் வகையிலான கருத்துகளைத் தெரிவித்ததாக பா.ஜ.க.வின் முன்னாள் பெண் நிர்வாகி ஒருவர், மாநகர காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அளித்த மறுநாளான ஜூன் 4 அன்று திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டார். பின்னர், ஜூன் 9 அன்று மைசூரில் முக்தாரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முக்தார் அகமது மற்றும் திருச்சி சூர்யா சிவா ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவர் மீதும் சென்னை காவல்துறை ஜூன் 16 அன்று குண்டர் சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து, அவர்களை முன்னெச்சரிக்கை காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்தத் தடுப்புக் காவல் உத்தரவுகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், நடைமுறை குறைபாடுகள் அல்லது இந்த உத்தரவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று வாதிடப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-notice-to-police-for-preventive-detention-of-youtuber-12153611