செவ்வாய், 29 நவம்பர், 2016

விவசாய விளைபொருட்கள் ஆன்லைனில் விற்பனை: 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிமுகம்

Published: November 27, 2016 12:00 .
விவசாய விளைபொருட்கள் ஆன்லைனில் விற்பனை: 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிமுகம்
எஸ்.நீலவண்ணன்.
மற்ற தொழில்களில் உற்பத்தி செய்பவர்களே விலையை நிர்ணயிக்கும்போது, விவசாயிகள் மட்டும் அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்ய முடியாத அவலம் நீடிக்கிறது. வேளாண் உற்பத்தியில் வணிகர்களும், இடைத்தரகர்களுமே லாபம் பெறுகின்றனர். இது ஆண்டாண்டு காலமாக நீடிக்கும் துயரம்.
விவசாயிகளுக்கு கட்டுப்படி யான விலை கிடைக்க வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்கும் புதிய முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ‘ஈ-நம்’ (e.nam) என்ற பெயரில் தேசிய வேளாண் சந்தை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மூலம் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களுக்கு தேவை எங்குள் ளது, இந்தத் தேவை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் விவசாயி களும், வியாபாரிகளும் இணைந் திருப்பார்கள். இதில் இடைத்தர கர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்.
கட்டுப்படியான விலையைக் கொடுக்க தயாராக இருக்கும் வியாபாரியும், விவசாயியும் ஒரே நேர்கோட்டில் வந்து விளை பொருட்களை விற்கவும், வாங்கவும் முடியும். இந்திய அளவில் தமிழ் நாடு உட்பட 15 மாநிலங்களில் இந் தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங் களைத் தருகிறார் விழுப்புரம் வேளாண் விற்பனைக்குழு செய லாளர் சங்கர்:
‘இ.நம்' (Electronic. National agriculture market) என்ற திட்டத்துக்கு தமிழகத்தில் 100 ஒழுங்குமுறை விறபனைக் கூடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் கொண்டுவரும் பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தரம் பிரித்து முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பட்டியலிட்டு இணையத்தில் பதிவு செய்யும். இந்தத் தரம் பிரித்தலுக்கு அந்தந்த வேளாண் விற்பனைக்குழுவே பொறுப்பு. இதுகுறித்து விவரங்களை www.enam.gov.in/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.
இதுதவிர, 'மொபைலில் நெட் பேங்கிங் ஆப்' போலவே மொபைல் மூலமே தங்கள் வேளாண் பொருட் களை விற்பனை செய்யவும், பொருட்களை வாங்கும் வகை யிலும் புதிய வேளாண் விற்பனை அப்ளிகேஷன் ஒன்றை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தேவையுள்ள வர்த்தகர்களைத் தொடர்பு கொண்டு நல்ல விலைக்கு தங்கள் பொருட்களை விற்கமுடியும். இதற் காக, ‘இண்டர்லிங்க் ஆஃப் ரெகுலேட்டர் மார்க்கெட்' என்ற முறையில் தமிழகத்தில் 15 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் இணைக்கப்படுகின்றன.
இந்த முறையை மிகச்சிறிய குறு விவசாயிகளும் பயன்படுத்த தமிழ்நாட்டில் உள்ள மின்னணு ஆளுமை சேவை (இ சேவை மையங்கள்) இயங்கவிருக்கின்றன. அவைகள் விவசாயிகளுக்கு வழிகாட்ட இருக்கிறது. இதற்கான பயிற்சிகளும் விரைவில் விவசாயி களுக்கு அளிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள மாவட் டங்களான விழுப்புரத்தில் 5, திரு வண்ணாமலை, ஈரோடு, கடலூரில் தலா 2, திருப்பூர், தூத்துக்குடி, கோவை, நாமக்கல் தலா 1 என 15 இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இவற்றில் எந்த மாவட்டங்களில் எந்த விளை பொருட்கள் வரத்து அதிகம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி - மணிலா பயறு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி - எள், விக்கிரவாண்டி, விழுப்புரம், அவலூர்பேட்டை, செஞ்சி - மணிலா பயறு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை - மஞ்சள், கோவை மாவட்டம் ஆனைமலை - கொப்பரை, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் - கொப்பரை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - மஞ்சள், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - மிளகாய் என கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கான கட்டுமான வசதிகள் செய்துகொள்ள ஒவ்வொரு மார்க்கெட்டுக்கும் ரூ 30 லட்சம் மத்திய அரசு நிதி அளிக்கிறது. இந்த சேவை விரைவில் அறிமுகமாகும் என்று தெரிவித்தார்.