வியாழன், 23 மார்ச், 2023

பீகார் தொழிலாளர்கள் தாக்குதல் போலி வீடியோ; கைதான யூடியூபர் மணீஷ் காஷ்யப்

 

22 3 23

manish
யூடியூபர் மணீஷ் காஷ்யப். (புகைப்படம்: ட்விட்டர்)

Santosh Singh

2018 ஆம் ஆண்டு தனது யூடியூப் சேனலைத் தொடங்கியதில் இருந்து, தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போலி வீடியோக்கள் தொடர்பான வழக்குகளில் முக்கிய குற்றவாளியான மணீஷ் காஷ்யப் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

35 வயதான மணீஷ் காஷ்யப், போலி வீடியோ வழக்குகள் தொடர்பாக மேற்கு சம்பராண் மாவட்டத்தில் உள்ள ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தார். ஞாயிற்றுக்கிழமை, பாட்னா நீதிமன்றம் அவரை புதன்கிழமை வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இரண்டு குழுக்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே பகையை ஏற்படுத்த முயன்றதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மணீஷ் காஷ்யப் மீது பீகாரின் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) மற்றும் தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மணீஷ் காஷ்யப்பிற்கு எதிரான சமீபத்திய மூன்று வழக்குகளில் ஒன்று, போலி வீடியோக்கள் வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக, 2019 ஆம் ஆண்டு மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டது தொடர்பானது.

மணீஷ் காஷ்யப் 2019 இல் இரண்டு முறை கைது செய்யப்பட்டார், ஒருமுறை பெட்டியாவில் உள்ள கிங் எட்வர்ட் VII சிலையை சேதப்படுத்தியதற்காகவும், பின்னர் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாட்னாவின் லாசா மார்க்கெட்டில் ஒரு காஷ்மீரி கடைக்காரரைத் தாக்கியதற்காகவும் கைது செய்யப்பட்டார்.

மேற்கு சம்பரானில் அவர் மீதான ஏழு வழக்குகளில், மணீஷ் காஷ்யப் ஆறில் ஜாமீன் பெற்றுள்ளார். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பரஸ் பக்ரி கிளையின் அப்போதைய மேலாளரை மிரட்டியதாகக் கூறி, 2021 ஆம் ஆண்டில், மேற்கு சம்பரான் போலீஸார், மஜௌலியாவின் தும்ரி மஹன்வா கிராமத்தில் உள்ள அவரது தந்தைவழி வீட்டைப் பறிமுதல் செய்தனர்.

போலி வீடியோ வழக்குகளில் மணீஷ் காஷ்யப் மற்றும் பீகாரைச் சேர்ந்த மேலும் மூவரின் பங்கு பற்றிய விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவுக்கு தலைமை வகிக்கும் கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) N.H கான் வழிநடத்துகிறார்.

பீகார் ஏ.டி.ஜி (தலைமையகம்) ஜிதேந்திர சிங் கங்வார் கூறுகையில், “மேற்கு சம்பராண் போலீசார் மணீஷ் காஷ்யப்பை பொருளாதார குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தனர். பீகார் பொருளாதாரக் குற்றப்பிரிவு தமிழ்நாடு போலீஸ் குழுவுடன் சேர்ந்து, மணீஷ் காஷ்யப் எப்படி போலி வீடியோக்களை படம்பிடித்து பரப்பினார் என்று விசாரித்தது. அவரது கூட்டாளிகளில் ஒருவரான கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் திவாரி, பாட்னாவின் ஜக்கன்பூரில் வீடியோ ஒன்றை படமாக்கியதாக போலீசாரிடம் கூறினார். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான அமன் குமார் என்பவர் ஜாமுயில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது மற்றொரு யூடியூபரான யுவராஜ் சிங் மட்டும் தலைமறைவாக உள்ளார்.

2016 ஆம் ஆண்டு புனே கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்த மணீஷ் காஷ்யப், 2018 ஆம் ஆண்டு தனது யூடியூப் சேனலான ‘சச் தக் நியூஸ்’ ஐத் தொடங்கினார். மணீஷ் காஷ்யப் பொதுமக்கள் கவலைகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி தனது யூடியூப் சேனலை தனித்துவமாக்க முயன்றார். ராணுவ வீரர் ஒருவரின் மகனான மணீஷ் காஷ்யப், 2020ல் மேற்கு சம்பரானில் உள்ள சன்பாடியா சட்டமன்றப் பிரிவில் தேர்தலில் போட்டியிட்டு 9,200 வாக்குகளுக்கு மேல் பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் மிகவும் ஆக்ரோஷமான யூடியூபராக மாறினார்.

பெட்டியா பத்திரிகையாளர் ராமேந்திர குமார் கூறுகையில், “மணீஷ் காஷ்யப் உள்ளூர் செய்திகளை வெளியிடுவார். அவர் உரத்த குரலில் பேசியதாலும், மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை உள்ளூர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்னதாலும், அவருக்கு பின்தொடர்பவர்கள் அதிகமானார்கள்,” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/manish-kashyap-engineer-who-turned-youtuber-nursed-political-ambitions-618401/