புதன், 22 மார்ச், 2023

நாடாளுமன்றம் நோக்கி பேரணி; காவல்துறை தடுத்து நிறுத்தம்

 

பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு சென்ற விவசாயிகளை காவல்துறை தடுத்து நிறுத்தம் பிஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 2ஆம் தேதி கன்னியாகுமரி துவங்கி மார்ச் 20 நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்கிற நெடும்ப பயண நிறைவு விழா டெல்லி ஜந்தர்மதரில் இன்று நடைபெற்றது, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசிய பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

” குமரியில் துவங்கிய நீதி கேட்கிற நெடு பயணம் கேரளா, சென்னை, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள் வழியே அம்மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை குறித்து வலியுறுத்தினோம். அனைவரும் எங்களுக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்தனர்.

நேற்று டெல்லி மாநில மூத்த அமைச்சர் கோபால்ராயை சந்தித்து வலியுறுத்திய நிலையில் இன்றைக்கு நிறைவு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடி விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுகிறார், போராட்டக் களத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்ற முன்வரவில்லை. விளைநிலங்கள், நிலக்கரி சுரங்கம் அமைக்கவும், உயர்மின் கோபுரங்கள் அமைக்கவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும்,  விமான நிலையங்கள் அமைத்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் விலை நிலங்கள் விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்துவது தொடர்கிறது.

மரபணு மாற்று விதைகளை அனுமதிப்பதோடு கார்ப்பரேட் நிறுவனங்களை சந்தைப்படுத்துவதிலும் உற்பத்தியிலும் அனுமதிக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயிகளை அந்நிய பெருமுதலாளிகளிடம் அடகு வைக்க முயற்சிக்கிறது. விவசாயிகள் பெற்ற கடனுக்காகவும் கல்வி கடனுக்காகவும் விவசாயிகள் வீடுகளை ஜப்தி செய்யவும், பத்திரிகைகள் ஊடகங்களில் விளம்பர செய்து விவசாயிகளை அவமாணப்படுத்தவும் வங்கிகளில் விளம்பர பதாகை வைத்து விவசாயிகள் படத்தை ஒட்டி கேவலப்படுத்தவும் சட்டம் வழிவகை செய்கிறதாம். ஆனால் அதானியின் ஊழலை வெளியிட ஆர்பிஐ அனுமதிக்க சட்டத்தில் இடம் இல்லை என உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்.

அதானிக்காக அரசியல் சட்டத்தையே மூடி மறைக்க முயற்சிக்கிறார். பிரதமர் இதனை ஏற்றுக் கொள்கிறாரா? அதானிக்கு ஒரு சட்டமா? சாதாரண ஏழை விவசாயிகளுக்கு ஒரு சட்டமா? இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவில் கார்ப்பரேட் முதலாளிகளுடைய முகவராக பிரதமர் மோடி செயல்படுவது வெளிப்படுகிறது. விவசாயிகளை ஒட்டு மொத்தமாக அழிக்க நினைக்கிறார். இதனால் உற்பத்தி பொருளுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யாமல் காலங்கடத்துகிறார்.விவசாயிகள் ஒற்றுமையை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். விவசாயிகள் மீது அவதூறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறார்.

தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்க மறுத்து விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகிறார். இதனை கண்டித்து இந்த பிரச்சார பயணம் இந்தியா முழுமையிலும் விவசாயிகளை போராட்டத்திற்கு மீண்டும் தூண்டும் நிலையை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு தவிர்த்து11 மாநில அரசுகள் எங்கள் பின்னால் அணிவித்து நிற்கிறது என்பதை பிரதமர் உணர வேண்டும்.

கோரிக்கைகள் அடங்கிய கடிதம் பிரதமர் அலுவலகத்திலும் நாங்கள் கொடுத்துள்ளோம். எங்களை டெல்லி காவல்துறை பாராளுமன்ற நோக்கி நீதி கேட்கிற பயணத்தை தடுத்து நிறுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய நாடு விவசாயிகள் நாடு, விவசாயிகளுக்கான தேசம் பாரத தேசம் என்கிற உணர்வோடு இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தோம், முழு வெற்றி பெற்றிருக்கிறோம்.தொடர்ந்து பிரதமர் மோடி விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராவிட்டால் ஆட்சியில் இருந்து அகற்றும் வரை எங்களுடைய போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என உறுதியற்றுள்ளோம் என பிஆர் பாண்டியன் தெரிவித்தார்.

source https://news7tamil.live/rally-towards-parliament-police-stoppage-br-pandian-condemned.html