புதன், 22 மார்ச், 2023

ஜக்கி வாசுதேவ்-ஐ விசாரிக்க வேண்டும்; ஈஷாவை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

 21 3 23

kovai protest
கோவையில் ஈஷாவைக் கண்டித்து பெரியாரிய இயக்கங்கள் போராட்டம்

கோவையில் இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தை கண்டித்தும் தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவை விசாரிக்க வேண்டும், அங்கு தொடரும் பல்வேறு மர்ம மரணங்கள் குறித்து விசாரித்து வரும் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்க வேண்டும், ஈஷாவிடம் வழங்கப்பட்டுள்ள மின் மயான பராமரிக்கும் ஒப்பந்தங்களை திரும்ப பெற்று மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் அரசாங்கமே நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஈஷாவிற்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இதில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு சங்கத் தலைவர் காமராசு உட்பட பெரியாரிய மார்க்சிய அம்பேத்கரிய இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு சங்கத் தலைவர் காமராசு கூறியதாவது, உலக வன நாளான இன்று காடுகளை அழிப்பவர்களை (ஈஷா) எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு உள்ளோம். பழங்குடியினர் மக்களின் நிலங்களை ஈஷா நிறுவனர் வாசுதேவ் அபகரித்துள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன் ஈஷாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த பவதுதா (எ) கணேசனை அவர்கள் கொலை செய்து விட்டார்களோ என்ற சந்தேகங்கள் எழுகிறது. எனவே தமிழக அரசு அங்கு நிகழும் மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான மயானங்களை ஈஷா பராமரித்து வருவதை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து பேசிய த.பெ.தி.க பொதுச் செயலாளர், கு.இராமகிருட்டிணன் கூறியதாவது, தமிழக அரசு ஈஷா மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பார்கள் என நம்புவதாகவும், தி.மு.க எதிர்கட்சியாக இருக்கின்ற போது தற்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஈஷாவை பற்றி விமர்சித்துள்ளதாகவும், மேலும் அறநிலையத்துறை வேண்டாம் என வாசுதேவ் கூறிய போதெல்லாம் தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டித்து உள்ளதாகவும், எனவே ஈஷா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை



source https://tamil.indianexpress.com/tamilnadu/kovai-periyarist-movements-protest-against-isha-yoga-jakki-vasudev-617987/