/indian-express-tamil/media/media_files/2025/04/05/kanimozhi-puthi1-459411.jpg)
தூத்துக்குடியின் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக, "புத்தொழில் களம்" என்ற முன்னெடுப்பை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி உள்ளார். இன்று (05/04/2025) தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் "புத்தொழில் களம்" நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் “புத்தொழில் களம்” நிகழ்ச்சி நடந்தது. இதில்,18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் தொழில் திட்டங்களுடன் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. தேசிய இளைஞர் தினத்தில் தொடங்கிய இந்த முயற்சி மூலம், 400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 10 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது. அதிலிருந்து 3 சிறந்த இளம் தொழில் முனைவோர் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.
புத்தொழில் களம் நிகழ்ச்சிக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமை வகித்தார். இதில், வெற்றி பெற்ற கோவில்பட்டியைச் சேர்ந்த ஆர்த்தி, விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த தானேஷ் கனகராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் காஸ்கேரினோ ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிதி ஓராண்டு காலத்துக்குள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழங்கப்படுவதால், அவர்களின் முயற்சிக்கு அதன் தொடக்கத்திலிருந்து தேவையான நிதி உதவி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கனிமொழி எம்பி பேசுகையில், ஊர் கூடி தேர் இழுத்தால்தான் என்று சொல்லக்கூடிய நிகழ்வாக அமைந்தது “புத்தொழில் களம்” இந்த நிகழ்வில் 400 நபர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களிலிருந்து மிகுந்த முயற்சி மற்றும் சவால்களுக்கிடையே 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர், அந்த 10 பேரில் இருந்து 3 சிறந்த இளம் தொழில் முனைவோரை தேர்வு செய்வது மிகவும் கடினமான செயலாக இருந்தது.
Social Start-Up சமூகத்தின் மீது அக்கறையோடு தொடங்கப்பட்டு இருக்கக்கூடிய ஒரு புதிய தொழிலாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் எந்த முயற்சி எடுத்தாலும், அதற்குத் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்னன் மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்ககூடிவார்கள்.
எப்போதும் பக்கபலமாக இருக்கும், இந்த மாதிரி இரண்டு அமைச்சர்களைப் போல யாரையும் பார்க்கவே முடியாது. முதன்முதலாக இரும்பை உருக்கி, அதனைப் பயன்படுத்தத் தொடங்கிய மாவட்டம் தூத்துக்குடி என்று கண்டுபிடித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. நம்முடைய தமிழர்களின் சரித்திரத்தில், தூத்துக்குடியிலிருந்து தான் தொழில் (Industries) தொடங்கப்பட்டது. தூத்துக்குடியில் இவ்வளவு தொழில் முனைவோரை பார்த்தபோது, எனக்கே ஆச்சரியமாக இருந்தது!
முதன்முதலாக இரும்பை உருக்கி, அதனை பயன்படுத்த தொடங்கிய மாவட்டம் தூத்துக்குடி என்று கண்டுபிடித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழர்களின் தொழில் வரலாற்றில், தூத்துக்குடியிலிருந்து தான் தொழில் (Industries) தொடங்கப்பட்டது என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி; "வக்ஃப் திருத்த மசோதா சிறுபான்மையின மக்களுக்கு எதிராக கொண்டு வந்திருக்கக்கூடிய மசோதா. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் இந்த மசோதாவை மறுபடியும் கொண்டு வந்து அவர்களுக்கு இருக்கக்கூடிய பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை இன்று அத்தனை எதிர்க்கட்சிகளும் எதிர்த்து உள்ளோம். எதிர்க்கட்சிகள் யாரும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். நிச்சயமாக அடுத்த கட்டமாக நீதிமன்றத்தை நாட உள்ளோம். அங்கேயாவது நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம். இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையேயான சமூகமான பேச்சுவார்த்தையை பிரதமர் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-dmk-mp-kanimozhi-press-meet-update-in-tamil-8930252