400 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளப்பணத்தை ஒழிக்க 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை வீணடிக்கலாமா என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். கருப்பு பண பதுக்கலை ஒழிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் அதேசமயத்தில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டு வருவது கருப்பு பணத்தை எப்படி ஒழிக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
400 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளப்பணத்தை ஒழிக்க 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை வீணடிக்கலாமா என்று வினா எழுப்பியுள்ள ப.சிதம்பரம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளர்.
November 12, 2016 - 11:53 AM