இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8- ஆம் தேதி அறிவித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். ரூபாய் நோட்டு பிரச்னை நாட்டையே திருப்பி போட்ட நிலையில், தங்கத்திலும் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த பத்து நாட்களில் வரலாறு காணாத வகையில் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. கடந்த 8- ஆம் தேதி முதல் இன்று வரை தங்கத்தின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் குறித்து காணலாம்.
பழைய நோட்டுகள் செல்லாது அறிவிப்பினால் ஒரே இரவில் தங்கத்தின் விலை 9- ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,456 உயர்ந்து ரூ.24,480-க்கு விற்கப்பட்டது. ஒரே இரவில் தாறுமாறாக ஏறிய தங்கத்தின் விலை அடுத்த நாள் படிப்படியாக குறைந்தது. 10- ஆம் தேதி மக்கள் பெருமளவில் தங்கம் வாங்க ஆர்வம் காட்டாததால் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. எனவே ஒரு கிராம் 49 ரூபாய் விலை குறைந்து 3,011 ரூபாய்க்கும், ஒரு சவரன் 392 ரூபாய் விலை சரிந்து 24,088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அன்றாட செலவுக்கே பணத்தை மாற்ற புறப்படும் மக்கள் தங்கத்தின் மீது அதிக அக்கறை காட்டாததால் 11- ஆம் தேதி சவரனுக்கு 464 ரூபாய் குறைந்து 23, 720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
பழைய பணத்தை மாற்றிக்கொள்ள மக்கள் வங்கியை நோக்கி புறப்பட்டதால் தங்கத்தின் மேல் கவனம் குறைய தொடங்கியது. இதனால் 12- ஆம் தேதியும் தங்கத்தின் விலை விழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது. இதன் விளைவாக, அன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ரூ.23,320 விற்கப்பட்டது. மேலும் படிப்படியாக குறைந்து 14- ஆம் தேதியும் சவரனுக்கு ரூ.23,320 க்கு விற்பனை செய்யபட்டது. ரூபாய் நோட்டுகள் எதிரொலி பட்டிதொட்டி எங்கும் பரவும் வேளையில், தங்கத்தின் விலை சரிவை தொடர்ந்து சந்தித்தது. 15- ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.72 குறைந்து ரூ.23,248 விற்கப்பட்டது.
ஒருவாரத்தில் இத்தனை சரிவை சந்தித்த ஆபரண தங்கம் 16- ஆம் தேதி சிறிது விலை உயர்ந்து 23, 216 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று திடீரென உயர்ந்த தங்கம் இன்று ரூ.72 குறைந்து ரூ.23,248க்கு விற்பனையாகிறது. ரூபாய் நோட்டு பிரச்னை பணப்பற்றாக்குறையை ஏற்படுத்திய இந்நேரத்தில் இன்னும் எந்த அளவிற்கு நாட்டை உலுக்கும் என்ற பயம் அனைவரிடத்திலும் உள்ளது எனலாம்.
பதிவு செய்த நாள் : November 17, 2016 - 05:43 PM