சனி, 18 பிப்ரவரி, 2017

மீத்தேன், பாறை எரிவாயுவைத் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டம்.. துரோகம் செய்யும் பாஜகவிற்கு வேல்முருகன் கடும் கண்டனம் !


சென்னை: கெய்ட் எரிவாயு திட்டம், மீத்தேன் திட்டம் என ஏதாவது ஒரு பெயரில் தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி நடைபெற்று வருகிறது. தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வர மத்தியில் ஆளும் பாஜக அரசு முயன்று வருகிறது. இதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக விளைநிலங்களை பாலைவனமாக்கும் படுபாதக செயலில் இந்திய மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
 

கர்நாடகத்தின் வஞ்சகத்தாலும் இந்திய மத்திய அரசின் துரோகத்தாலும் காவிரி நீர் கிடைக்காமல் காவிரி டெல்டா பாசன பகுதிகள் பாலைவனமாகிவிட்டன. 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டு போயுள்ளனர்.
இந்த நிலையில் மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் போன்றவற்றை காவிரி பாசன பகுதிகளில் திணித்து ஒட்டுமொத்த விளைநிலத்தையும் பாழ்படுத்தும் படுபாதக சதிச் செயலை தொடர்ந்து திணிக்கிறது இந்திய மத்திய அரசு. காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் பாறைஎரிவாயு எடுக்கும் திட்டங்களுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கடுமையாக எதிர்த்தது. தமிழக அரசும் கடுமையாக எதிர்த்தது. இதனால் மத்திய அரசு பின்வாங்குவதாக அறிவித்தது.
ஆனால் இந்த மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்ற பெயரில் புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மீத்தேன், பாறை எரிவாயு, கெயில், நியூட்ரினோ என தமிழகத்தை நாசமாக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எந்த ஒரு பெயரில் நடைமுறைப்படுத்த முயற்சித்தாலும் தமிழகம் ஒட்டுமொத்தமாக கிளர்ந்தெழுந்து இவற்றை தடுத்து நிறுத்துவோம் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
http://kaalaimalar.net/velmurukan-to-bjp/

Related Posts: