ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

நீட் தேர்வு இதுவரை

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம் நீட் தேர்விற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வினை தமிழக மாணவர்கள் எழுத வேண்டுமா? வேண்டாமா என்ற குழப்பம் இதுவரை நீடித்து வருகிறது.
நீட் தேர்வு:
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வினை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நீட் தேர்வானது தமிழக கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால்தான், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரும் கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
இதனிடையே, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2017-2018-ம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் மாதம் 1-ம் தேதி என்ற காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி கேட்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால், பிராந்திய மொழிகளில் படித்த மாணவர்களுக்கு இத்தேர்வினை எழுதுவதில் சிரமம் ஏற்படும் என்று கூறி பல்வேறு மாநில அரசுகள் நீட் தேர்விக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, மத்திய அரசு தமிழ், ஆங்கிலம், வங்காளம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, ஹந்தி, அஸ்ஸாமி ஆகிய 8 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வகை செய்து, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்திருந்தார்.தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என பிரதமர் நரேந்திர மோடியை நாளை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தவுள்ளார். குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால் தான் அது சட்டமாக நிறைவேற்றப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் கட்டாயம் ஏற்படலாம்.