ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

இந்தியாவில் 70% நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை கிடைப்பதில்லை

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் புதிய நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் இந்த உயிர் காக்கும் சிகிச்சை, 30 சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகளுக்குத்தான் கிடைக்கிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
“டயாலிசிஸ் சிகிச்சையில் நெறிமுறைசார் சிக்கல்கள்” என்ற தலைப்பில் அந்த ஆய்வு நடந்தது.
ஆய்வின் முன்னணி விஞ்ஞானி விவேகானந்தா ஜா “இந்தியா தேசிய டயாலிசிஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தும் முனைப்பில் உள்ளது. ஆனால் அதற்கு முன்னர், டயாலிசிஸ் வசதியுள்ள மருத்துவமனைகளுக்கான விதிகளை நாம் வகுக்க வேண்டும். இதன் மூலம் டயாலிசிஸ் செய்வதற்கான குறைந்தபட்ச தரத்தை உறுதி செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.
“நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட டியாலிசிஸ் சிகிச்சையின் விபரம், அதற்கான செலவு, சிகிச்சைக்கு பிறகுள்ள முன்னேற்றம் ஆகியவை மருத்துவமனையால் பதிவு செய்யப்பட வேண்டும்” எனவும் ஜா கூறினார்.
சிறுநீரக நோய் சிகிச்சை குறித்து 2015-ல் லான்சட் என்ற அமைப்பு வெளியிட்ட உலகளாவிய ஆய்வில், 2010-ம் ஆண்டில் டயாலிசிஸ் சிகிச்சை வசதியில்லாமல் 2.28 மில்லியன் நோயாளிகள் இறந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோ குறைந்த வருமானம் மற்றும் கீழ் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.