ராகுல் காந்தியின் இந்திய நீதிப் பயணத்திற்கு மணிப்பூர் அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கன்னியாகுமரியில் கடந்த 2022 செப்டம்பர் மாதம் தொடங்கி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேஷம் , டெல்லி வழியாக ஜம்மு-காஷ்மீர் வரை ராகுல் காந்தி ஒற்றுமைக்கான நடைப்பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) மேற்கொண்டார். நாடு முழுவதும் ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை இரண்டாம் கட்ட நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் இரண்டாம் கட்டப் பயணமான ‘இந்திய நீதி பயணம்’ ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கி மும்பையில் மார்ச் 20-ஆம் தேதி முடிவடையும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது.
ஜனவரி 14-ம் தேதி இம்பாலில் தொடங்கி மார்ச் 20-ஆம் தேதி மும்பையில் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட பயணம் நிறைவடைகிறது. மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்கள் வழியாக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை தொடஙக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மணிப்பூர் அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில், ஜனவரி 14ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நடைப் பயணத்தை தொடங்க மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைப்பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குறித்த பட்டியலையும் மணிப்பூர் அரசு கோரியுள்ளது.
source https://news7tamil.live/rahul-gandhis-justice-tour-of-india-manipur-govt-allowed-due-to-strong-opposition.html