புதன், 31 ஜனவரி, 2024

மருத்துவர், செவிலியர் போல் வேடமணிந்து மருத்துவமனையில் தாக்குதல் – இஸ்ரேல் ராணுவம் அட்டூழியம்.!

 31 01 2024

மருத்துவர், செவிலியர் போல் வேடமணிந்து  இப்னு சினா மருத்துவமனையில் தாக்குதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய காணொலிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர்.  இதில் ஏராளமான ராணுவ வீரர்களும்,  பொதுமக்களும் உயிரிழந்தனர்.  இதனிடையே,  கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.  இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.  வான்வழி,  தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.  இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.  இந்நிலையில்,  காசாமுனையில் உள்ள பணைய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.  ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணைய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.  காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 100 நாட்களை கடந்துள்ளது.  இந்த நிலையில்,காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 165 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,422-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 65,087 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படையினர் மருத்துவர், செவிலியர் போல வேடமணிந்து சென்று தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் குழுவினர் சிகிச்சை பெற்றுவருவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த  தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ராணுவம்.  இதில் முகமது ஜலாம் நிஹ் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் மருத்துவர் மற்றும் செவிலியர் போன்று வேடமணிந்து மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனங்களை சந்தித்து வருகின்றன


source https://news7tamil.live/attacking-the-hospital-pretending-to-be-a-doctor-and-nurse-israeli-army-is-an-atrocity.html