புதன், 31 ஜனவரி, 2024

சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயக கொலை செய்துள்ளது – வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்!

 30 01 2024

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை வெளிப்படையாக கொலை செய்துள்ளதாக காங்கிரஸ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இந்த ஆண்டு  மே 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது. 

இதனிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹின் நோய்வாய்ப் பட்டுள்ளதால், தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. அத்துடன் பிப்.6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதனை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தியதால் தேர்தல் தேதியை ஜனவரி 18-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 6-ம் தேதிக்கு சண்டிகர் துணை ஆணையர் ஒத்திவைத்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது கடந்த ஜன. 24-ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஜனவரி 30-ம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடத்தப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜன. 30) காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்று நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.  35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகரில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இறுதியில் ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை தோற்கடித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “சண்டிகரில் மேயர் தேர்தல் நடந்தது. பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனால் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. மொத்தம் 36 இடங்களில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணிக்கு 20 வாக்குகளும், பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரியை பாஜகவினர் நியமித்தனர்.

இந்த வீடியோவில், தேர்தல் அதிகாரி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என அறிவித்துள்ளார். இதன் மூலம் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை வெளிப்படையாக கொலை செய்துள்ளது.” என பதிவிட்டுள்ளது.


source https://news7tamil.live/bjp-has-killed-democracy-in-chandigarh-mayoral-election-congress-released-video.html