செவ்வாய், 23 ஜனவரி, 2024

பாலஸ்தீனத்தில் தொடரும் போர் – 25ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.!

 

பாலஸ்தீனத்தில் தொடரும் போர் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை  25ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர்.  இதில் ஏராளமான ராணுவ வீரர்களும்,  பொதுமக்களும் உயிரிழந்தனர்.  இதனிடையே,  கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.  இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.  வான்வழி,  தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.  இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.  இந்நிலையில்,  காசாமுனையில் உள்ள பணைய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.  ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணைய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.  காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 100 நாட்களை கடந்துள்ளது.  இந்த நிலையில்,காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 190 பேர் உயிரிழந்தனர் மற்றும் 340 பேர் காயமடைந்தனர்.

இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,295-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 63,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/the-ongoing-war-in-palestine-the-death-toll-exceeds-25-thousand.html