புதன், 31 ஜனவரி, 2024

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ புதிய திட்டம்; ஜன. 31 முதல் நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு

 ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ புதிய திட்டம்; ஜன. 31 முதல் நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு 30 01 2024 

அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் நாளை (ஜன. 31) முதல் நடைமுறைக்கு வருகிறது. பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி அவற்றை திறம்பட செயல்படுத்தி முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் 

இல்லம் தேடி கல்வித் திட்டம் 

மக்களைத் தேடி மருத்துவம் 

நான் முதல்வன் 

இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 

புதுமைப் பெண் 

முதலமைச்சரின் காலை உணவு 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 

கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர் 

போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் மக்களுக்காக தீட்டப்பட்டு அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை முன்னணி மாநிலமாக தலை நிமிரச் செய்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும் நிர்வாகத்தில் வெளிப்படுத்தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில்  ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 23.11.2023 அன்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இத்திட்டம் நாளை 31.01.2024 புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் சென்னை மாவட்டம் நீங்களாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல் மாவட்ட ஆட்சித் தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும், அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்



அரசின் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீளித்து எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/ungalaith-thedi-ungal-ooril-new-scheme-starts-on-january-31st-tn-government-announced-2407984