வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை – அம்பாலா காவல்துறை அறிக்கை!

 ஹரியானா மாநில எல்லையில் போராடி வரும் விவசாயிகள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்பாலா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை,  புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி டிராக்டரில் விவசாயிகள் பேரணி சென்றனர். பஞ்சாப்,  ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லிக்குள் நுழைய முயன்றதால், சாலைகளில் தடுப்புகளை அமைத்து எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆனால், தடுப்புகளை தகர்த்தெறிந்து டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் முயற்சித்தனர்.  அப்போது, அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசினர். சாக்குப் பைகளை முகத்தில் கட்டியவாறு, கண்ணீர் புகையின் தாக்கத்தை சமாளித்துக் கொண்டே, விவசாயிகள் தடுப்புகளை கடந்து வர முயற்சித்தனர். ஆனால், அடுத்தடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.இதனிடையே, கடந்த 18-ந் தேதி, விவசாயிகள் சங்கத் தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா,  பியூஷ் கோயல்,  நித்யானந்த் ராய் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,  பருப்பு வகைகள்,  மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசு அமைப்புகள் கொள்முதல் செய்யும் என்று ஒரு திட்டத்தை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க அவகாசம் கொடுக்கும் விதமாக, போராட்டத்தை நிறுத்திவிட்டு, எல்லையிலேயே விவசாயிகள் தங்கினர்.

இதையும் படியுங்கள் : “இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல… தானா சேர்ந்த படை…” – கோவையில் அண்ணாமலை பேச்சு

இதனிடையே நேற்று முன்தினம் பஞ்சாப்-ஹரியானா இடையிலான கானாரி எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகள்,  டெல்லி நோக்கி செல்வதற்காக தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது,  போலீசாருக்கும்,  விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 3 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் பஞ்சாப்பைச் சேர்ந்த 21 வயதான இளம் விவசாயி சுப் கரன் சிங் உயிரிழந்தார்.

இதனை அடுத்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்தார். இதனால், போராட்டத்தை தற்காலிகமாக 2 நாட்களுக்கு விவசாயிகள் நிறுத்தி வைத்தனர். வரும் 26-ம் தேதி மாபெரும் ட்ராக்டர் பேரணி நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஹரியானா காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அம்பாலா காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், போராட்டக்காரர்களால் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேதம் குறித்த விவரங்களை தெரிவித்தால், போராட்டக்காரர்களின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை இழப்பீடாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) 1980ன் கீழ் விவசாய சங்கங்களின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாலா காவல்துறை தெரிவித்துள்ளது.

source https://news7tamil.live/action-under-national-security-act-against-farmers-ambala-police-report.html