வியாழன், 15 பிப்ரவரி, 2024

3வது நாளாக தொடரும் போராட்டம் – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்!

 

விவசாயிகளின் போராட்டம் 3வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் பிப்.13 அன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டெல்லி நோக்கி முன்னேறினர். ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் விவசாயிகளை தடுத்து வருவதால் பெரும் பதற்றம் நீடித்தது. எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போலீசாருடன் மோதலுக்குப் பிறகு அவர்கள் இரவு எல்லைப்பகுதியிலே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் தொடர்ந்து போராட்டத்தை நடத்தப்போவதாக கூறினர்.

பொறுமையை சோதித்தால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். “ஊசி முதல் சுத்தியல் வரை. எங்களின் வண்டிகளில் கற்களை உடைக்கும் கருவிகள் உட்பட அனைத்தும் உள்ளன. ஆறு மாத ரேஷன் உடன் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளோம். ஹரியானாவைச் சேர்ந்த எங்கள் சகோதரர்களுக்குக்கூடப் போதுமான டீசல் எங்களிடம் உள்ளது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை” என்று பஞ்சாபின் குர்தாஸ்பூரில் இருந்து வந்துள்ள விவசாயி ஒருவர் கூறினார்.

15 2 2024

விவசாயிகளின் பயணத்தை முறியடிக்க டிராக்டர்களுக்கு டீசல் வழங்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். பல இடங்களில் நடைபெறும் போலீஸ் சோதனை காரணமாக எல்லைப் பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தின் 3வது நாளான இன்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


souce https://news7tamil.live/protest-continues-for-3rd-day-farmers-plan-to-stage-rail-strike-today.html#google_vignette