சனி, 24 பிப்ரவரி, 2024

இந்த வகை வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்துக்கு தடை; தமிழக அரசு வரைவு கொள்கை வெளியீடு

 தமிழ்நாட்டில் 9 வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்துக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு வரைவு கொள்கை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் குளிர்ச்சியான சூழ்நிலையில் வளர்க்கப்படும் வெளிநாட்டு வகை இன நாய்கள் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் வளர்க்கப்படும்போது, அதன் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதனால், நாய்கள் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், பராமரிப்பவர்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இவைகளை எல்லாம் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் 9 வகை இன வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்துக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு வரைவு கொள்கை வெளியிட்டுள்ளது.

இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்து வரைவுக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கையின்படி,  பாசெட் ஹவுண்ட் (Basset Hound), பிரெஞ்ச் புல்டாக் (French Bulldog), அலாஸ்கன் மாலமியூட் (Alaskan Malamute), கேஷோண்ட் (Keeshond), நியூஃபவுண்ட்லாண்ட் (Newfoundland), நோர்வே எல்க்ஹவுண்ட் (Norwegian Elkhound), திபேத்திய மஸ்திஃப் (Tibetan Mastiff), சைபீரியன் ஹஸ்கி (Siberian husky), செயிண்ட் பெர்னார்ட் (Saint Bernard) வகை நாய்களின் இனப்பெருக்கத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

மேலும் “அனைத்து நாய் வளர்ப்பாளர்களும் பொறுப்பான முறையில் ‘நாய்கள் இனப்பெருக்க நடைமுறை’களை கடைபிடிக்க வேண்டும். மேலும் நாய்களின் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் (TNAWB) இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான சான்றிதழை வழங்கும். நாய்கள் வளர்ப்பவர்கள், இனப்பெருக்கம் செய்யப்படும் குறிப்பிட்ட இனம் குறித்து TNAWBல் பதிவு செய்ய வேண்டும். இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் நாய்களை, கால்நடை மருத்துவரிடம் முன் உடல் நலம் பரிசோதிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/lifestyle/breeding-of-cold-climate-dogs-shall-be-strictly-prohibited-draft-tamil-nadu-dog-breeding-policy-3986056