புதன், 19 மார்ச், 2025

கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

 19 3 25

power loom workers strike

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் விசைத்தறி தொழிலை நம்பி உள்ளனர். விசைத் தறியாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகள் இயங்காத நிலையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்  நாளொன்றுக்கு சுமார் ரூ.40 கோடிக்கு மேல் வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மின் கட்டண உயர்வுக்கு தீர்வு காண வேண்டும், கூலி உயர்வுக்கு சட்டப் பாதுகாப்புடன் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விசைத்தறியாளர்கள் பிரதானமாக முன்வைக்கின்றனர். 

விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஜவுளி உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு காடா துணி உற்பத்தி பாதிக்கப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 

கடந்த 4 ஆண்டுகளில் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், புதிய கூலி உயர்வு கோரி வருவதாக தெரிவித்துள்ள விசைத்தறியாளர்கள் மின் கட்டணங்கள், கட்டட வாடகை, விசைத்தறி உதிரி பாகங்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் அனைத்தும் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் பூபதி தலைமையில் சோமனூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வேலை நிறுத்தம் தொடர்பான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை


source https://tamil.indianexpress.com/tamilnadu/power-loom-workers-in-coimbatore-and-tiruppur-go-on-indefinite-strike-8869251

Related Posts: