திருமண செலவு 5 லட்சத்தைத் தாண்டும் ஆடம்பர திருமணங்களை நடத்தும் குடும்பங்கள், திருமண மொத்த செலவில் 10% தொகையை ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்துக்கு வழங்க வேண்டும் என்ற தனி நபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பப்பு யாத்வ்வின் மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜ்னீத் ரஞ்சனால் இந்த தனி நபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜ்னீத் ரஞ்சன் கூறும்போது, “திருமணம் என்பது இரண்டு நபர்களை சார்ந்த நம்பிக்கை. ஆனால் இந்தக் காலத்தில் துரதிஷ்டவசமாக திருமணம் என்பது ஆடம்பரமாகவும், தங்களது செல்வ வளத்தை காட்டும் ஆடம்பர பொழுதுபோக்காக நாட்டில் வளர்ந்து வருகிறது. இதனால் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மிகப் பெரிய சமூக அழுத்தம் உருவாகியிருக்கிறது. இது முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டியது. மேலும் இது சமூகத்துக்கு நல்லதல்ல” என்றார்.
தனிநபர் மசோதா
“ஐந்து லட்சத்துக்கும் அதிகமாக செலவழித்து திருமணம் செய்வோர், திருமணத்துக்கு திட்டமிட்டுள்ள தொகை குறித்து முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
திருமணத்துக்கான மொத்த தொகையில், 10% வறுமை கோட்டுக்கு கீழ்வுள்ள குடும்ப பெண்களின் திருமண உதவி திட்டத்துக்கு நிதியாக வழங்க வேண்டும். மேலும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அனைத்து திருமணங்களும் 60 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
source: kaalaimalar