திங்கள், 27 நவம்பர், 2023

வங்கக் கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 

rain tamil nadu

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று(நவ.27) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,  தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/depression-in-bay-of-bengal-7-districts-in-tn-likely-to-get-rain-1710029