சனி, 24 ஏப்ரல், 2021

தமிழகத்தில் 13,000-ஐ கடந்த கொரோனா எண்ணிக்கை: அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியல்

 இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு மற்றும் முழு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாள் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களில் 10 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று புதிய உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக மக்கள் முக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டள்ளது.

இதனால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், இன்று புதிய உச்சமாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,51,487 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு இன்று ஒரே நாளில், 78 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 13395 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 8078 பேர் குணமடைந்து வீடு திரும்பியள்ள நிலையில், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,43,044 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 95048 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 2,17,54,456 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமான சென்னையில் அதிகபட்சமாகாக 3842 பேருக்கு செங்கல்பட்டில் 985 பேருக்கும் கோவையில் 889 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-covid-19-update-all-districts-today-update-295219/