சனி, 23 ஏப்ரல், 2022

ரயிலில் சர்ச்சைக்குரிய செய்தித்தாள் விநியோகம் – ஐஆர்சிடிசி எச்சரிக்கை

 

பெங்களூருவிலிருந்து நேற்று சென்னை சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சர்ச்சைக்குரிய கட்டுரைகள் அடங்கிய அங்கீகரிக்கப்படாத செய்தித்தாள் விநியோகிப்பட்டுள்ளதை பயணிகள் கண்டறிந்தனர். இதுதொடர்பாக ரயில்வே உள் சேவைகள் உரிமதாரருக்கு ஐஆர்சிடிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூர் தலைமையிடமாக கொண்ட ‘ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ்’நாளிதழில் “இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்களின் இனப்படுகொலை அங்கீகரிக்கப்பட வேண்டும், ஔரங்கசீப்பையும் ஹிட்லரைப் போல படுகொலைகளை செய்பவர் என ஐநா முத்திரை குத்த வேண்டும் போன்ற கட்டுரைகள் இடம்பெற்றிருந்தது

இதுகுறித்து ரயில் உள்சேவை உரிமதாரர் பிகே ஷெஃபி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, “அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாளுடன் எக்ஸ்ட்ரா பேப்பராக விற்பனையாளரால் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், பேப்பரைக் கண்டறிந்த பயணி, இது செய்தித்தாளுடன் சேர்ந்து விநியோகிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

செய்தித்தாள்களை விநியோகிக்கும் எங்கள் ஆட்களுக்கு, எக்ஸ்ட்ரா பேப்பர் குறித்த புரிதல் கிடையாது. சொல்லப்போனால், அவர்கள் விநியோகிக்கும் பேப்பரில் உள்ள செய்திகளை படிக்கவே மாட்டார்கள். இனிமேல், எவ்வித எக்ஸ்ட்ரா பேப்பர், நோட்டீஸ்களை ரயிலில் விநியோகிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

IRCTC இன் நிர்வாக இயக்குனர் ரஜினி ஹசிஜா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, “உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். ஒப்பந்தத்தின்படி, உரிமம் பெற்றவர் டெக்கான் ஹெரால்டு மற்றும் கன்னடப் பத்திரிகை மட்டுமே பயணிகளுக்கு காம்ப்ளிமென்டாக வழங்க வேண்டும். அவர் ஒப்பந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

இந்த சர்ச்சைக்குரிய செய்தித்தாள் குறித்து ரயிலில் பயணித்த கோபிகா பக்ஷி என்பவர் ட்வீட் செய்திருந்தார்.

அந்த பதிவில், “இன்று காலை பெங்களூர் டூ சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தேன். எல்லா இருக்கைகளிலும் ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ் என்ற பேப்பர் மூலம் பயணிகள் வரவேற்கப்பட்டனர். இத்தகைய செய்தித்தாள் பெயரை இதுவரை கேட்டதே இல்லை. ஐஆர்சிடிசி இதை எப்படி அனுமதிக்கலாம்” என டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார். மற்ற பயணிகளும், ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம், எப்படி இந்த நியூஸ்பேப்பரை விநியோகிக்கலாம் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஐஆர்சிடிசி, “ரயிலில் எப்போதும் விநியோகிகப்படும் அங்கீகரிப்பட்ட செய்தித்தாளுக்குள் ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ் பேப்பரை இணைத்து விநியோகித்துள்ளனர். இத்தகயை நிகழ்வு மீண்டும் நடைபெறாத வகையில், உள் சேவை உரிமையாளருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளோம். ரயிலில் கண்காணிப்பில் இருக்கும் அதிகாரிகள், இனிமேல் இதனை செக் செய்யவார்கள்” என தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த பயணி பக்ஷி, “உங்களது ரெஸ்பான்ஸூக்கு நன்றி, ஆனால் நிச்சயம் இந்த செய்தித்தாள் , அங்கீகரிக்கப்பட்ட நியூஸ்பேப்பருடன் சேர்க்கப்பட்டு வந்திருக்க வாய்ப்பில்லை. இது எனது இருக்கையில் இருந்தது. மற்ற பயணிகளின் இருக்கையிலும் இருந்தன” என தெரிவித்தார்.

இதற்கிடையில், ஐஆர்சிடிசி அதன் ட்வீட்களை நீக்கியது. இதுகுறித்து செய்தி தொடர்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, “counselled” என்ற வார்த்தை சரியான அர்த்தத்தை தரவில்லை. அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாளில், சர்ச்சையான நியூஸ்பேப்பர் எவ்வாறு இணைக்கப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/india/controversial-newspaper-distributed-on-train-irctc-warning-444685/