24 07 2021 சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட புகாரில் தேடப்பட்டுவந்த மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமை மீட்பு குறித்த ஆர்ப்பாட்டத்தில், இந்து கடவுள்கள், பிரதமர் உள்ளிட்டோரை மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு, தேடப்பட்டு வந்ததால் தலைமறைவானதாக தெரிகிறது. இந்நிலையில், கன்னியாகுமரியிலிருந்து காரில் சென்னைக்கு சென்ற மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவை மதுரை கருப்பாயூரணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய நிலையில், அங்கு வந்த கன்னியாகுமரி காவல்துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
source https://news7tamil.live/christian-pastor-george-ponniah-arrested.html