திங்கள், 26 ஜூலை, 2021

பெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா பானர்ஜி

 

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் மேற்கு வங்க அரசு ஆணையம் அமைத்துள்ளது.

இஸ்ரேஸ் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்தியாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர், பத்திரிகையாளர்கள் உள்பட சுமார் 300 பேருடைய செல்ஃபோன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் செய்தி வெளியானது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையோ, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணையோ நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் எம்.பி.கள் கேள்வி எழுப்பினர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியது.

இந்நிலையில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர், கொல்கத்தா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிர்மாய் பட்டாச்சார்யாவை கொண்ட  2 பேர் ஆணையத்தை மேற்குவங்க அரசு அமைத்துள்ளது.

நாட்டிலேயே முதன்முதலாக விசாரணை ஆணையம் அமைத்தது மேற்குவங்க அரசுதான் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு விசாரணை ஆணையம் அமைக்காததால், தான் அமைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

26 07 2021 

soure :https://news7tamil.live/mamata-banerjee-constitutes-inquiry-panel-to-probe-pegasus-case.html