வெள்ளி, 30 ஜூலை, 2021

சோனியா – மம்தா சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரள அழைப்பு

 29 07 2021

India news in tamil: Mamata Banerjee rallies parties against BJP

Mamata Banerjee news in tamil: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலுக்காக எதிர் காட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். 5 நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து மம்தா பானர்ஜி பேசுகையில், “நான் இன்று சோனியா காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்தேன். நேற்று லாலு பிரசாத் யாதவுடன் பேசினேன். பாராளுமன்றத்தின் பருவமழைக் கூட்டத்தொடர் முடிந்ததும் சில விவாதங்கள் நடந்துள்ளன, மேலும் இன்னும் உறுதியான விவாதங்கள் நடைபெறும்.

தேர்தல்கள் நெருங்கும்போது, கூட்டணி குறித்து ​​எதிர்க்கட்சிகள் முடிவு செய்யும். நரேந்திர மோடியை எதிர்த்து நாடே போரிடும். அப்போது அவருக்கு எதிராகப் போராட பல முகங்கள் இருக்கும். பாஜக கட்சி அளவில் பெரியதாக இருக்கலாம், ஆனால் அரசியல் கோணத்தில் எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும். அவர்கள் அனைவரும் இணைத்து ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவார்கள்.

எதிர்வரும் நாட்களில் மாநில கட்சிகள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என நம்புகிறேன். எனக்கு நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி, முக ஸ்டாலின் (திமுக) போன்றவர்களுடன் நல்ல உறவு உள்ளது. இவர்களுடனான கூட்டணி இன்று நடக்கவில்லை என்றாலும் நாளை அது நிச்சயம் நடக்கும். அரசியலில் ஒரு புயல் உருவெடுத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.

ஒவ்வொரு மாநிலக் கட்சியும் வலிமையானவை என்றுதான் நான் எண்ணுகிறேன். இந்த கட்சிகள் ஒன்றாக இருந்தால், அவை ஒரு சக்தியாக உருவெடுக்கும். இந்த சக்தி ஒரு கட்சியின் கீழ் உள்ள தலைமையை விட வலிமையானது. நேர்மை இருந்தால், ஒற்றுமை இருக்கும், கிடைக்கும் வாக்குகளும் சிதறாது.

எனக்கு பிரதமராக விருப்பம் இல்லை. ஒரு சாதரண தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.

சோனியா காந்தி அவர்கள் என்னை ஒரு கப் டீ அருந்த அழைத்தார், அப்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார். அரசியல் நிலைமை குறித்து பொதுவாக விவாதித்தோம். பெகாசஸ் மற்றும் கோவிட் நிலைமை பற்றியும் விவாதித்தோம். தொடர்ந்து எதிர்க்கட்சி ஒற்றுமை பற்றி விவாதித்தோம். ஒரு சாதகமான முடிவு வெளிவரும் என நம்புகிறேன்.

ஸ்னூப்பிங் விவகாரத்தை விவாதிக்க மக்களவை ஒரு சிறந்த இடம்.மக்களவை மற்றும் மாநிலங்களவை கொள்கை முடிவுகள் அறிவிக்கப்படாவிட்டால், அவை விவாதிக்கப்படாவிட்டால், அவை எங்கே விவாதிக்கப்படும்?” இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/india-news-in-tamil-mamata-banerjee-rallies-parties-against-bjp-327209/