ஞாயிறு, 25 ஜூலை, 2021

பெகாசஸ் உளவு குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கோரிக்கை

 


பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ பாதுகாப்பு கண்காணிப்பு நிறுவனத்தின் பெகாசஸ் என்ற உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி, பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக திடுக்கிடும் செய்தி வெளியானது.

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்துள்ளன. பெகாசஸ் வாயிலாக உளவு பார்க்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் விளக்கம் அளித்திருக்கின்றனர். எனினும் பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியதா இல்லையா என்ற கேள்விக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரித்தாஸ் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர், “உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். த வயர் இணையதளத்தில் வெளி வந்த செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதியின் மொபைல் போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.இது நீதித்துறையின் நிர்வாகத்தில் தலையிடுவதற்கு சமமான குற்றமாகும். இது அதிர்சியளிக்கும் விஷயமாக இருக்கிறது. அரசின் பாதுகாப்பு முகமைகளால் பெகாசஸ் மென்பொருள் வாங்கப்பட்டதா இல்லையா என்று மத்திய அரசு கூறவில்லை,” என்று கூறியுள்ளார்.

இதே போல உச்ச நீதிபதி எம்.எல்.சர்மா என்பவரும் இது போல ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவரும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25 07 2021 

source https://news7tamil.live/pegasus-snooping-row-in-supreme-court.html