ஞாயிறு, 25 ஜூலை, 2021

மத்திய பாஜக அரசு மக்களின் உரிமைகளை பறிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு

 


மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் வடக்கு மண்டல கூட்டம் சென்னை மயிலாப்பூரில் நடந்தது. இதில் பங்கேற்ற பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அரசியலமைப்பு சட்டம் வழங்கிய ஒவ்வொரு உரிமையையும் மத்திய அரசு பறித்து வருகிறது.

மூன்று வேளாண் திருத்த சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச வேண்டும். இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை சிறப்பானதாக இருந்தது. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.” இவ்வாறு நல்லகண்ணு பேசினார்.

25 07 2021 

source https://news7tamil.live/bjp-extortion-peoples-rights-says-cpi-senior-leader-nallakannu.html