புதன், 19 ஜூன், 2024

“ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு? நீங்களா? ரயில்வே அமைச்சரா?” என பிரதமர் க்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரி கேள்வி!

 

மேற்குவங்க ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் நேற்று(ஜூன் 17) கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் விபத்துக்கு ரயில்வே துறையின் தவறே முக்கிய காரணமென எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதையடுத்து தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் பதவி விலக வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி பதிலளிக்கக் கோரியுள்ளார்.

கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஒவ்வொரு முறை ரயில் விபத்து நிகழும்போதெல்லாம், ரயில்வே அமைச்சர் சம்பவ இடத்துக்கு கேமராக்களின் ஒளியின் கீழ் செல்வதும், அங்கே அனைத்தும் சுமூகமாக இருப்பதைப் போல நடந்துகொள்வதும் வாடிக்கையாகியுள்ளது.!

இந்த விபத்துகளுக்கு யார் பொறுப்பு? நீங்களா? ரயில்வே அமைச்சரா? என பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், கீழ்கண்ட 7 கேள்விகளுக்கு மோடி அரசு பதிலளிக்க வேண்டும்.

1.ஒடிஸாவில் பாலசோரில் நிகழ்ந்ததைப் போன்ற பெரும் விபத்தைத் தொடர்ந்து, ரயில் விபத்துகளை தடுக்கும் கவச் தொழில்நுட்பம் ஒரு கிலோமீட்டருக்கு கூட இணைக்கப்படவில்லை?

2.ரயில்வேயில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன? அவையனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் நிரப்பப்படாதது ஏன்?

3.என்சிஆர்பி 2022 அறிக்கையின்படி, 2017 – 2021 இடைப்பட்ட காலத்தில்,ரயில் விபத்துகளால் மட்டும் சுமார் 1 லட்சம் மக்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு யார் பொறுப்பு? ஆள்பற்றாக்குறை காரணமாக ரயில் ஓட்டுநர்கள் அதிக பணிச்சுமையால் பாதிக்கப்பட்டிருப்பது, அதிகரித்து வரும் ரயில் விபத்துகளுக்கான முக்கிய காரணம் என்பதை ரயில்வே வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. அப்படியிருந்தும் பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்?

4. என்சிஆர்பி 323வது அறிக்கையின்படி, ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின்(சிஆர்எஸ்) பரிந்துரைகளை, ரயில்வே வாரியம் புறக்கணித்திருப்பதை சுட்டிக்காட்டி ரயில்வே துறையை நாடாளுமன்ற நிலைக்குழு விமர்சித்துள்ளது. நிகழும் ரயில் விபத்துகளில், 8 – 10 சதவீத விபத்துகளை மட்டுமே ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரிக்கிறது. இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையம் வலுப்படுத்தப்படாமல் இருப்பது ஏன்?

5.சிஏஜியின்படி, ஒவ்வோர் ஆண்டும் ரூ. 20,000 கோடி தொகை ஈட்டப்படும் போதும், ‘ராஷ்திரிய ரயில் சுரக்‌ஷா கோஷ்’ திட்டத்தில் 75 சதவீத நிதி குறைக்கப்பட்டுள்ளது, இந்த நிதி, ரயில்வே அதிகாரிகளால் தேவையற்ற செலவினங்களுக்காகவும், வசதிகளை அதிகரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுவது ஏன்?

6.சாதாரண படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிக்க அதிக செலவாகிறது ஏன்? படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டிருப்பதும் ஏன்? சமீபத்தில் ரயில்வே அமைச்சர் அளித்துள்ள பேட்டியில், ரயில் பெட்டிகளில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதுவதால் காவல்துறையை ஏவி அவர்களைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில், 2.70 கோடி மக்கள், ரயில்களில் போதிய இருக்கைகள் இல்லாததால் தாங்கள் முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டுகளை ரத்து செய்யும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை, மோடி அரசின் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை குறைக்கும் கொள்கைகளின் நேரடி விளைவாக அமைந்துவிட்டது.

7.பொறுப்பேற்பதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மோடி அரசு ரயில்வே நிதிநிலை அறிக்கையை பொது பட்ஜெட்டுடன் 2017-18இல் இணைத்துள்ளதா? தங்களைத் தாமே, சுயமாக புகழ்ந்திடுவதன் மூலம், இந்திய ரயில்வேயை கண்டுகொள்ளாமல் மோடி அரசு தவறிவிட்டதை ஈடுகட்ட முடியாது. இவையனைத்துக்கும் பொறுப்பேற்பதை முதன்மையாக்க வேண்டும்! எனப் பதிவிட்டுள்ளார் கார்கே.

source https://news7tamil.live/who-is-responsible-for-train-accidents-are-you-railway-minister-congress-leader-mallikarjuna-asked-prime-minister-narendra-modi-a-barrage-of-questions.html