சனி, 29 ஜூன், 2024

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா இன்று தாக்கல்: ஸ்டாலின் அறிவிப்பு

 

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா இன்று தாக்கல்: ஸ்டாலின் அறிவிப்பு


28 06 2024

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்ததில் 65 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மதுவிலக்கு அமலாக்க சட்ட திருத்த மசோதா இன்று (சனிக்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''கள்ளக்குறிச்சி விவகாரம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து பல்வேறு அலுவல்களில் இது குறித்து பேசி வருகிறோம். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் தண்டனைச் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கதுறையின் திருத்தச் சட்ட மசோதா இன்று (சனிக்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்' என்று அவர் கூறினார். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cm-mk-stalin-on-amendment-enforcement-liquor-prohibition-tamil-news-4785334