ஞாயிறு, 30 ஜூன், 2024

“பூரண மதுவிலக்கே தீர்வு”- திருமாவளவன் பேட்டி!

 

மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான் எனவும், ஆனால் பூரண மதுவிலக்கு என்பதே தீர்வு எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

கள்ளச்சாராய, நச்சுச்சாராய உயிரிழப்புகள் இந்தியா முழுவதும் உள்ளது. இதற்கு தீர்வு என்பது பூரண மது விலக்கு. டாஸ்மாக் கடையில் விற்கும் மதுவாலும் பாதிப்பு உள்ளது. ஆகவே தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை அமல்படுத்த வேண்டும். மெத்தனால் மாபியா கும்பலை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு முதலில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான். ஆனால், பூரண மது விலக்கு என்பதே தீர்வு.

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. அவர்கள் பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவாக பெற்றுள்ளனர். அயோத்தி கோயில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்து உள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.

தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியதாகவே நான் கருதுகிறேன். காந்தியடிகள் கள் உள்பட எந்த மதுவும் வேண்டாம் என்றுதான் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷசாராய மரண சம்பவம் தொடர்பாக நேரில் சென்றபோது அங்குள்ள மக்கள் கூறியது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றுதான். முதலமைச்சர் டாஸ்மாக் கடையை மூடினால் மக்களிடம் நல்ல பெயர் ஏற்படும். ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காவல் துறையில் தனிஉளவு பிரிவு தொடங்க வேண்டும். பூரண மது விலக்கை ஆதரித்து விசிக சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்று மிகப்பெரிய மகளிர் மாநாடு நடைபெற உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/alcohol-prohibition-bill-is-good-but-the-solution-is-complete-abstinence-thirumavalavan-advises.html