வெள்ளி, 28 ஜூன், 2024

நெல் குவிண்டாலுக்கு விலை அதிகரிப்பு ஏமாற்று நாடகம்:

 தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்


பிஆர்.பாண்டியன்

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடன் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ2500/- வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள்.

3 ஆண்டு காலமாக தொடர்ந்து வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வந்த நிலையில் வழங்க மறுத்து ஏமாற்றி விட்டார்கள். சென்ற ஆண்டு முதல் விவசாய உற்பத்தி செலவு கூடுதல் ஆகிவிட்டதால்௹ 3500/- வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 

இந்நிலையில் மத்திய அரசு ஆண்டுதோறும் குவிண்டால் ஒன்றுக்கு 100 ரூபாயை உயர்த்தி சடங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக 2014 மோடி அரசு பொறுப்பு ஏற்புக்கு முன்  நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 1200/- வழங்கப்பட்டதாகவும், எனது ஆட்சி பொறுப்பு ஏற்று பத்தாண்டு காலத்தில் ரூ2400 ஆக உயர்த்தி இரட்டிப்பு விலை வழங்கி உள்ளதாக சொல்லி ஏமாற்றி இருக்கிறார். அவர் ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கு முன் உற்பத்தி செலவு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் ஆக இருந்தது. தற்போது இடு பொருட்கள் விலை பல மடங்காக உயர்ந்து உற்பத்தி சிலவு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 45 ஆயிரம்  உயர்ந்துள்ளது.

மத்திய அரசு தற்போது ரூ 2400 உயர்த்தி உள்ள நிலையில் ஊக்கத்தொகையாக தமிழ்நாடு அரசு ரூ 100 உயர்த்தி வழங்குவதை பின்பற்றி நடப்பாண்டு ரூ 2500 வழங்கி உள்ளதாக தன்னை தானே பாராட்டிக் கொள்கிற நிலை ஏற்பட்டிருப்பது என்னி வேதனை அடைகிறோம். 

2018 முதல் ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநிலங்கள் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500-/- வழங்கி ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கும் விலையோடு சேர்த்து உயர்த்தி வழங்கி வருகிறார்கள்.

தற்போது ஒடிசாவில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு நெல் குவிண்டால் 1க்கு ரூபாய் 3100 விலை நிர்ணயம் செய்துள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.இதனை வண்மையாக கண்டிக்கிறோம்.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விவசாயிகளை ஏமாற்றுவதை கைவிட்டு ஒடிசா அரசை பின்பற்றி உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு நெல் குவிண்டால் 1 க்கு ரூ 3100/- வழங்கிட வலியுறுத்துகிறேன்” என்றார்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/pr-pandian-has-insisted-on-providing-rs-3100-per-quintal-of-paddy-4783756