வெள்ளி, 21 ஜூன், 2024

நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக்கொண்ட பீகார் மாணவர்!

 

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட பீகார் மாணவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீட்தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் அனுராக் யாதவ் என்பவர் குற்றாச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.  இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் “கோட்டாவில் உள்ள ஆலன் கோச்சிங் சென்டரில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தேன்.  எனது மாமா சிக்கந்தர் பி.யத்வேந்து தானாபூர் நகராட்சி மன்றத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிகிறார்.

மே 4ம் தேதி இரவு அமித் ஆனந்த்,  நிதிஷ் குமார் என்ற நபர்களிடம் என் மாமா அழைத்துச் சென்றார்.  அங்கு எனக்கு நீட் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வழங்கப்பட்டது, அதை இரவோடு இரவாக படித்து மனப்பாடம் செய்தேன்

தேர்வெழுத பள்ளிக்குச் சென்ற போது, ​​ மனப்பாடம் செய்த வினாத்தாள் சரியாக தேர்வில் கேட்கப்பட்டிருந்தது.  தேர்வு முடிந்ததும் திடீரென்று போலீஸ் வந்து என்னைப் பிடித்தது. நான் என் குற்றத்தை ஒப்புக்கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் நடத்தி முடிக்கப்பட்ட  நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்,  தேர்வு வினாத்தாள் கசிவு,  கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுத்தேர்வுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தேர்வையை ரத்து செய்ய வேண்டும் என பலர் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.


source https://news7tamil.live/bihar-student-admitted-to-malpractice-in-the-examination.html