திங்கள், 24 ஏப்ரல், 2023

12 மணி நேர வேலை மசோதா; யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார்; அமைச்சர் சேகர் பாபு

 

23 4 23

Sekar Babu
அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் ஸ்டாலின்

12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக முதலமைச்சர் நல்ல முடிவெடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, 12 மணி நேர வேலை மசோதா குறித்து முதல் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி நாளைய தினம் (ஏப்ரல் 24) பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் த.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அந்த கூட்டத்தில் சுமுகமாக பேசி நல்ல முடிவுகள் எடுக்கப்படும். இந்தப் பிரச்சனை தொடர்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலமைச்சர் பிரச்சனையை தீர்ப்பார். யாரும் எதிர்பாராத முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுப்பார், என்று கூறினார்.

இதற்கிடையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மே 12 ஆம் தேதி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/sekar-babu-says-stalin-will-take-good-decision-on-12-hour-work-bill-648083/